திருமங்கலம்

கூட்டமானக் கூட்டம். செந்தி முடிந்தவரை சமாளித்துக்கொண்டிருந்தார். பொழுது போக அமரும் இடம் என்றாலும் இதுபோன்ற கூட்டமான நேரத்தில் முடிந்தவரை உதவ வேண்டி இருக்கும், உதவிக்கொண்டிருந்தோம். சுந்தரா மெடிக்கல்ஸின் ஆதாரமே இந்தக் 'கவுண்ட்டர் சேல்ஸ்'தான். வேலை விட்டு திரும்புவர்கள், புல்லு வண்டி, லோடு மேன், டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் என அனைத்துதரப்பு வேலையாட்களும் வீடு திரும்பும் பொழுது ஒரு எட்டு சுந்தரா மெடிக்கல்ஸ் செந்தியைப் பார்த்து ஏதாவது மாத்திரை வாங்கிப்போவது அனிச்சை.

விதவிதமான வலிகள், நோய்கள். “ஏ செந்தி, மூடைய இறக்கும் போது விசுக்குண்டு இங்கணக்குள்ள பிடிச்சுச்கிடுச்சுப்பா, வாயுவா இருக்கும். அந்த இதக் குடு”.

‘வலிச்சு வலிச்சுப் போகுதுய்யா’

‘பிட்டுப் பிட்டாப் போகுதுய்யா’

“செந்தில், நல்லா இருக்கீங்களா, லேஸா ஹெட் ஏக் மாதிரி இருக்கு. பெயின் கில்லர் குடுங்க, ஆண்ட்டிபயாடிக்கும் குடுங்க செந்தில், தேங்க்ஸ்”

“மேலுக்குச் சொகமில்ல செந்திண்ணே, வீட்ல, வீட்லண்ணே, நமக்கில்ல, கொஞ்சம் கேட்குறமாதிரி கொடு”

“நல்லா கொடுத்தப்பா நேத்து செந்தி. நடுமண்டைல சுத்தியக் கொண்டு எறக்குனமாதிரி கேட்டுச்சு. அதுல நாலக் குடு.”

இப்படி ஏதாவது ஒரு ரோகம். மாத்திரைகள். மாலை ஆறிலிருந்து அறுபது நிமிடங்களுக்கு அப்படித்தான் இருக்கும். ஏழு ஏழரைக்கு கொஞ்சம் காத்து வாங்க ஆரம்பிக்கும்.

டெண்டுல்க்கர் ஆட வந்தபொழுது பிறந்தே இருக்காதவர்கள் இப்பொழுது அவருடன் ஒன்றாக விளையாடுவது போலத்தான் அங்கே எங்கள் குழுவும். அந்தக் காலத்து செட் என்று அவர்களாகவே சொல்லிக்கொள்ளும் சங்கரண்ணே, ஒச்சண்ணே, வேல் அண்ணே என அழைக்கப்படுபவர்கள் அமர்ந்து வளர்த்த ஜமா அது. அதில் நான், ராஜா, பாலா என நுழைய துவங்கிய நாட்களில் கடைக்குள் விடமாட்டார்கள். கடைக்கு வெளியில் இருந்தே பேசிவிட்டுச் சொல்வோம். டீ அவர்களாகச் சொல்லிக் குடித்துக்கொள்வார்கள். கொஞ்சம் விபரீதமான ஜோக் அடித்து அவர்களாகவே சிரித்துக்கொள்வார்கள். ‘ஏ அப்புறம் பேசுவமப்பா பயலுக இருக்காங்க’. ஆனாலும் பாலா சுற்றிச் சுற்றி அவர்களுக்கு ஈடாக அந்த மாதிரி விசயங்களைப் பேசுவான். “ஏன் செந்தியண்னே ஒங் கடைல அந்த மாத்திரை இருக்காம்ல”
டேய் போடா அப்பா சாமி..அதெல்லாம் ஒண்ணும் இல்ல. உங்க வீட்லச் சொல்லிக் கல்யாணத்தப் பண்ணச் சொல்லுடா”

புரிகிறதோ இல்லியோ சேர்ந்து சிரிப்பது. , டீ சொல்லவா செந்திண்ணே என ஊடுபாவுவது. யாரும் கடைக்குள் இல்லை என்றாலும் வெளியில் கொறப்பாச்சம் போட்டு நிற்பது என ஒரு வழியாக கடைக்குள் அமரும் பிரமோசன் கிடைத்தது. அதன்பிறகு எப்பொழுது ‘எல்லாம்’ சரிசமமாக பேச ஆரம்பித்தோம் என்பது தெரியவில்லை. செந்தி அண்ணனின் உலகமே அந்த பத்தடிக்கு இருபது கடைதான் என்பதால், நண்பர்களை அப்படி மதிப்பார். வாய்யா தியாகராஜா என அவர் யாரையாவது அழைத்தால், தியாகு என்று அழைக்கப்பட்டவர் மாத்திரை வாங்கிப்போனதும் மொத்தமாக எல்லோரும் செந்தியைச் சூழ்ந்து கொள்வார்கள். என்னா செந்தி சொல்ற, தியாகுவா இவரு, எந்த ஏரியாலப்பா வீடு என நச்சரிப்பார்கள். அப்பொழுது ஒன்றும் புரியவில்லை. நாட்கள் கழித்து, அவர் தியாகராஜன் என யாரையாவது சொன்னார் எனில், அந்த நபரின் வீட்டைப் பற்றி அப்படி இப்படி என பரோட்டாச் செய்திகளாக இருக்கும்.

அவ்வளவாக எதுவும் பேசாமல் கேட்டுக்கொண்டிருப்பது வழக்கம். பொழுது போவது என்பதை விட பொழுது போதாது என்பதே சரி. அதிலும் ஊரில் நடக்கும் சமாச்சாரங்களைப் பற்றி அலர் தூற்றல் தூக்கலாகவே இருக்கும். கல்யாணம் ஆன அன்று, முதலிரவுக்கு பயந்து ஓடி ஒளிந்து விட்டு ஒருவாரம் கழித்து திரும்பி வந்திருந்த ராசகோவாலைப் பற்றி அந்த ஒருவாரமும் கடையில், எது அவனைப் பயம் கொள்ளச் செய்தது என்ற கற்பனை காட்சிகள் வயிற்றில் வலியும் கண்களில் நீருமாய் சிரித்துத் சிரித்து பேசப்பட்டன. ராசகோவால் அதன்பிறகு தன் குழந்தைக்கு ஃபேரக்ஸ் வாங்க வந்தால்கூட செந்தி லேசாக ஆரம்பிப்பார் சிரித்துக்கொண்டே, ‘ஏய்யா எதப் பார்த்..ஏய் ஏய் ராசா விடப்பா கோவிக்காத’.

அங்கே எல்லாமே கேலிதான். எனக்குத் தெரிந்து அங்கே எந்தப் பிரச்சனையையும் வெகு சீரியஸாக ஒருநாளும் பேசிக்கொண்டதே கிடையாது. அவரின் வார்த்தைக் கோர்வைகள் அப்படி இருந்ததும் ஒரு காரணமாய் இருக்கலாம்.

‘அதோ வர்றாரு பாருய்யா, அவர்கிட்ட நீ போயி, சார், எனக்கு இந்த பிரச்சனைய முடிச்சுக்கொடுங்க, ரூவா எவ்வளவு வேணாலும் வாங்கிக்கீங்க’ன்னு சொல்லிப்பாரு. உன்னய அதே இடத்துல பளார்னு அறைஞ்சுடுவாரு. லஞ்சம் அப்பிடின்ற வார்த்தைதான் உலகத்துலயே அவருக்குப் பிடிக்காத வார்த்தை’ சிரிக்காமல் வெகு சீரியஸாகச் சொல்லுவார். முதல்முறை செந்திலிடம் இதைக் கேட்பவர்கள் சாட்சாத் மகாத்மாவே நடந்து போகிறார் போல என்று நினைத்துக் கொள்வார்கள். எங்களுக்குத்தான் தெரியும், லஞ்சம் லஞ்சம் என்று அலைபவரைப் பற்றித்தான் செந்தி இப்படி மாற்றிச் சொல்கிறார் என்று.

ரு வெய்யில் நேரம். கசகசவென வேர்வை. எதற்கெடுத்தாலும் கோவத்தை வரவழைத்துவிடுகிற கத்திரி வெய்யில். கடையில் நானும் செந்தி அண்ணனும் மட்டும்தான் இருந்தோம்.

‘ஸ்ஸ்ஸ், என்னய்யா இன்னிக்கு இப்பிடி இருக்கு வெய்யி’ என நாளிதழை விசிறியாக வீசிக்கொண்டே சொன்னார். ‘கரெண்ட்ட வேற கட் பண்ணிட்டாய்ங்க’ பேசிக்கொண்டிருக்கும் பொழுதே பரபரப்பாக வந்தார் வேலு. எந்தச் செய்தியாக இருந்தாலும் முந்தித்தருவது தந்திக்கு முன்னரே வேலுதான்.

‘ஏ செந்தி, வெவரம் தெரியுமா, நம்ம முருகனோட மாப்ள மருந்தக் குடிச்சுப்புட்டானாம்ய்யா’

நான் பதறிப்போய் என்ன ஏதென்று கேட்டால் ஏதோ லவ் ஃபெயிலியரோ மார்க் குறைச்சலோ சரியாகத் தெரியவில்லை என்றார்.

கேட்டுக்கொண்டிருந்த செந்தி சாவகாசமகாச் சொன்னார். ‘ இப்பிடி மருந்தக் குடிக்கிறவங்க கிட்ட என்ன சொல்லணும் தெரியுமா, அடடா, அர பாட்டில்தான் குடிச்சியாடா, சரி, சரி, பந்தல் எப்பிடிப் போட்டா பிடிக்கும்டா உனக்கு? வாடிப்பட்டி கரகாட்டம் சொல்லணுமா? சாகுறதுக்குள்ள சொல்லுப்பா, ஏற்பாடு பண்ணணுமா இல்லியா’ன்னு கேட்கணும்ய்யா..அதக் கேட்டே சாகணும் அவென் அது என்னா அப்பிடி ஒரு வீம்பு? என்றதும் அவர் சொன்ன காட்சியை நினைத்து என்னை மறந்து சிரித்துவிட்டேன்.

‘சும்மா இரப்பா செந்தி, பாவத்த’- என்று வேலண்ணே சொன்னதும் சிரிப்பை அடக்கிக்கொண்டேன். அவர் போனதும் நானும் செந்தியும் அவர் சொன்ன ஐடியாவை விஸ்தாரமாகப் பேசி சிரித்துக்கொண்டோம். கண்களை இடுக்கிச் சிரித்துக்கொண்டே செந்தி, ‘என்னா யோசிச்சுப்பாரு எப்பிடி இருக்கும் ம்ம், சாகக் கிடக்குறவனப் பார்த்து, டேலேய் சொல்லுடா போஸ்ட்டர்ல உம்பேர எப்பிடிடாப் போடணும் செத்ததும்..” வாக்கியத்தை முடிக்க முடியாமல் சிரிப்பு மிகும்.

னதே சரியில்லாத ஒரு நாள் சரி மெடிக்கல்ஸில் அமர்வோம் எனப் போய் அமர்ந்தவுடன் செந்தி கேட்டார். என்னய்யா டல்லா இருக்க, சரி சரி, பெரியசாமி வந்துட்டு இருக்காப்ல. சிரிக்காமக் கேளுய்யா அவர்கிட்ட நான் பேசுறத.” என செந்தி சொல்லும்பொழுதே எனக்கு சிரிப்பு வந்துவிட்டது.

‘வாங்க பெரியசாமி. இப்ப எப்பிடி இருக்கு? “

“அத ஏன் கேட்குற செந்தி’ சொல்லிக்கொண்டே கட்டை விரலை மற்ற விரல்களில் இருந்து விலக்கி ‘ப’ வடிவில் வைத்து லேசாகக் குனிந்து தன் முட்டிக்காலில் பிடித்துக் காட்டியவாரே “வலின்னா வலி, அம்புட்டு வலி, உசுறு போகுதுய்யா, ஒரு இடத்துல இருந்து எந்திரிக்க முடியல, நடக்க முடியல’ ஏன் ஏப்பா சிரிக்கிற?” என சிரித்துக்கொண்டிருந்த என்னைப் பார்த்து பெரியசாமி கேட்டுக்கொண்டே தன் வலது கால் முட்டியில் மீண்டும் விரல்களை வைத்து, இதுல சுர்ர்ருனு ரத்தம் கட்டின மாதிரியே இருக்கப்பா எப்பவும், எந்திரிச்சு நடக்கவே முடியுறதில்லை, உக்காந்தா உக்காந்த இடம், நின்னா நிண்ட இடம், முடியல”

நான் சிரிப்பை அடக்குவதில் தோற்று, கடைக்குள் சென்று வேறு மாத்திரை தேடுவது போல நடித்துக் கொண்டிருந்தேன்.

செந்தி, “அப்பிடியா பெரியசாமிண்ணே, இது கிட்டத்தட்ட பத்து வருசமா இருக்கு போலயே.. நானும் ஏதேதோ மருந்து கொடுக்குறேன். சரியாக மாட்டேங்குது.” சிரிக்காமல்.

அவரும் ‘என்னத்தச் சொல்ல? நான் வாங்கி வந்த வரமப்பா. ரெண்டு மாத்திரையக் கொடு’ என வாங்கிக்கொண்டு ‘அம்மம்மா, யப்பப்பா” என காலை மெதுவாக எடுத்து வைத்து தத்தித் தத்தி நடந்து கொண்டிருந்தார்.

“பாவம்ய்யா, எதுக்குய்யா இப்பிடிச் சிரிக்கிறீங்க” என கேட்டுக்கொண்டே வந்த பழனிச்சாமியைப் பார்த்து செந்தி காரணத்தைச் சொன்னார்.

“பத்து வருசமா இப்பிடித்தான், உட்கார்ந்தா எந்திரிக்கவே முடியாம இருக்காரு பழனி. ஆனா அன்னிக்கு ராஜீவ்காந்தி செத்தக் கலவரத்துல மன்றம்,மந்தைன்னு எரிச்சாய்ங்க பாரு, உக்காந்திருந்த கூட்டத்துல இருந்து மொத ஆளா, சொடக்குப் போடுறதுக்குள்ள சல்லுனு எந்திருச்சு வீட்டுக்கு ஓடி தடதடன்னு மொட்டை மாடிக்குப் போய் அங்க இருந்து வேடிக்க பார்த்த ஆளுய்யா இவரு, அன்னிக்கு மறந்துட்டாரு போல கால்வலிய”. கண்களை இடுக்கிக் கொண்டு செந்தி சொல்லச் சொல்ல பழனியும் சிரிக்கத் துவங்கி இருந்தான்.

ந்த வருடமும் குற்றாலம் செந்தி தலமையில் கிளம்பிவிட்டோம். அந்த முறையும் எவ்வளவு அழைத்தும் பாலா மட்டும் வரமறுத்துவிட்டான். ஏண்டா நம்ம போறப்ப மட்டும் வர்ற, என்றதற்கு லேசாக சிரித்துக்கொண்டே “வேல இருக்குடா போய்ட்டு வாங்க, என்சாய் மாப்ள” என்றவனை பார்த்து “பொல்லாத வேல, போடாப்பா”வென கிளம்பிவிட்டோம்.

வழி நெடுக செந்தி அண்ணனும் பழனியும் ஊர்ப்பேச்சு, ஆட்டம் என ரகளையைப் போட நானும் ஒச்சும் பாட்டுக்கேட்டுக்கொண்டே போய்க்கொண்டிருந்தோம். ஆடிக்கொண்டிருந்த பழனி கால் இடறி செந்தியண்ணன் மேல் விழ, சீட்டிற்கு அடியில் இருந்த தகரம் குத்திக் கிழித்துவிட்டது அவரின் கால் ஆடுசதையை. ‘திருமங்கலம்தான வந்திருக்கு, ஒண்ணு பண்ணுங்க, நீங்க போங்க, நான் நாளைக்கு வர்றேன், ரொம்ப ரத்தம் போகுது, வலிக்குது, டேய் பழனி ஆட்றா ஆட்றா” என சிரித்துக்கொண்டே எதிர் வந்த அம்பாசிடரை மடக்கி ஏறிப்போனார். ஏறும்பொழுது “டேய் என் சரக்க தீர்த்துராதீங்கடா, நாளைக்கு மதியம் வந்துடுவேன்”. டீயைக் குடித்துவிட்டு திருமங்கலத்தில் இருந்து கிளம்பும் பொழுது இருட்டத் துவங்கி இருந்தது.

மெயின் ஃபால்ஸில் குளித்துவிட்டு, சுடச்சுட வடையையும் ஆவிபறக்கும் இட்லியையும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்பொழுது பழனிச்சாமியின் மொபைல் அடித்தது. ஈரத்தில் நைந்துபோயிருந்த விரல்நுனிகளைக்கொண்டு மொபைலில் ஈரம் பட்டுவிடாதவாறு அழுத்திப் பேசினான்.

“என்ன வேலு சொல்ற? என்னய்யா சொல்ற? எதுக்காம்யா..அய்யோ என்னய்யா இது?”

அதிர்ந்து பார்த்தோம். “செந்தி மருந்துக் கடைல தொங்கிட்டாப்லயாம்ய்யா”.


--

மதுரம்

திய நேரம். சுரீர் வெய்யிலில் லேசான காய்ச்சலோடு அமர்ந்திருந்தது பிடித்திருந்தது. சோகை பிடிச்சிருக்கும் என வீட்டிற்குள் பேசுவது கேட்டது. இந்தக் கோடியில் இருந்து அந்தக் கடைசி வரை தெருவில் யாரும் நடமாடவில்லை. லேசாக சாய்ந்தவாறு சைக்கிளை உருட்டிக்கொண்டே தங்கைய்யா மட்டும் வந்து கொண்டிருந்தான். ‘ன்’ போட்டு எழுதுவதால் தங்கையா வயதை குறைத்து மதிப்பிட வேண்டாம். எப்படியும் 60க்கு மேலே இருக்கும். ஆனால் தெருவில் எல்லோருக்கும் தங்கையா, வா போ, அவன் இவன், ஏகவசனம்தான்.

‘என்ன தங்கைய்யா? எங்க?”

'என்னத்தச் சொல்ல, நம்ம புளியங்க்காவுக்கு இப்பத்தான் சொன்ன பலசரக்க எல்லாம் வாங்கிட்டு வந்து கொடுத்தேன். பச்ச மிளகாய மறந்துட்டாளாம். உடனே வேணும்னதும் போய்ட்டு இருக்கேன். திருப்பி வெய்யில்ல போக கஷ்டமா இருந்தா அவரு சைக்கிள வேணா எடுத்துட்டுப் போன்னு சொல்லுச்சு.. அதான்’

’ஓஹோ.. ஆமா ஓட்டிட்டுப் போகவேண்டியது தான?’

‘எனக்கு எந்தக் காலத்துல சைக்கிள் ஓட்டத் தெரிஞ்சுச்சு?’ உருட்டிக்கொண்டே தனக்குத் தானே பேசிக்கொண்டு போய்க்கொண்டிருந்தான்.

புளியங்கா என்று சொன்னது ப்ரியங்க்கா என்ற பெயரை. பச்சை மிளகாயை வாங்கிக்கொடுத்துவிட்டு, சைக்கிளை சுவரில் சாய்த்து வைத்து விட்டு வேர்வையைத் தொடைத்தவாறே திண்ணைக்குள் நுழைந்த தங்கைய்யா, ‘வெய்யில்ல உட்காராதடா’ எனத் தலையில் தட்டி, லாவகமாக என்னைத் தாண்டிக் கொண்டு உள்ளே நுழைந்து போக, நானும் மெதுவாக தொடர்ந்தேன்.

‘இந்தாம்மா, காபித்தூள், சக்கரை எல்லாம் இதுல இருக்கு, லிஸ்ட்டும் என் செலவும் எழுதி இருக்கேன் பாரு’ தூணை ஒட்டித் துண்டை உதறிக்கொண்டே –ஏல்ப்ப்பாண்டி, என ஏதேதோ சொல்லிக்கொண்டே அமர்ந்தான்.

‘என்ன தங்கைய்யா, வெய்யிலா?’- இந்தக் கேள்வியை கேட்டு விட்டு அமர்ந்தால் போதும். நிரல்கள் வந்து விழும்.

‘ஏன் கேட்குற போ. ஆடி வீதிப்பக்கம் பாளம் பாளமாக வெய்யில் சாத்துது. ஸ்ஸ்ஸ் அப்பப்பா, இங்க அவ்ளோ லிஸ்ட்டா, அத முடிச்சிட்டு, கோவாலு வீட்டுக்காரம்மா வாங்கி வரச்சொல்லி ஒரு கடைய சொல்லி இருந்தா, அங்கப் போய்ட்டு, டவுன்ஹால் பக்கம் வந்தாக் கூட்டம்’

எவ்வளவு அடக்கினாலும் சிரிப்பு வந்துவிடும் அந்தக் கேள்வியை கேட்கும் பொழுது. லேசாய் சிரித்துக்கொண்டே ‘டவுன்ஹால் ரோட்டுக்கு ஏன் போன? இப்பிடியே வந்துரலாமே தங்கைய்யா?”

சுரீர் என்று கோவம் வந்துவிடும் தங்கையாவுக்கு. ‘மாடர்ன் ரெஸ்ட்டாரண்ட்’ அங்கதானடா இருக்கு, அங்க காஃபி குடுச்சேன்னா” சொல்லிக்கொண்டே நாக்கை காளி போல நீட்டுவான். “நாக்குலயே இருக்கும்டா கசப்பு’ கை விரல்களைத் தேய்த்துக்கொண்டே, கல்லிப்பால்ல போடுவான் போல அப்பிடித் திக்கா இருக்கும். அதான் ஒரு எட்டு அங்கப் போய்ட்டு வந்துடுவேன். அன்னிக்கு நீ கூட்டிப்போனியே பஸ் ஸ்டாண்டுக்கு பக்கமான்னு, எழவு பூன மூத்தரத்துலப் போட்ட மாதிரி இருந்துச்சு காபி”

சாப்பாட்டு நேரமாக இருந்தால் சாப்பாடு, சாயந்திரம் என்றால் காஃபி. இடைப்பட்ட இந்த மதியம் என்றால் எதையும் எதிர்ப்பார்க்காமல் அவன் வார்த்தைகளில் ‘கொஞ்ச நேரம் கட்டய சாய்ச்சுக்குறேன்’ என சிறு தூக்கம்.

காலை ஆறு ஆறரைக்கெல்லாம் பளீரென விபூதிப் பட்டையோடு தெருவில் இறங்கி, பேப்பர லேட்டாப் போடுறதே வழக்கமாப் போச்சு என பேப்பர் வாங்குபவர்களுக்குப் பதிலாக ஆதங்கப்பட்டு, பேப்பரைப் பார்த்துவிட்டு, ஒவ்வொரு வீடாகக் கிளம்பிவிடுவான் லிஸ்ட் எடுக்க. யார் வீட்டிற்கு என்ன வேண்டும் என்ற லிஸ்ட்டை அவன் கைப்படவே எழுதிக்கொள்வான். இந்த உலகைப் படைத்ததாகச் சொல்லப்படும் எவர் வந்தாலும் அதைப் படித்துவிட முடியாது. ஒரே நேரத்தில் அம்பது அறுவது கோழிகள் கிண்டிவிட்ட மாதிரியான எழுத்து. ஆனால் ஒரு நாள் கூட எந்த ஒரு சாமானையும் மறந்தது கிடையாது, மாற்றி வேறோர் வீட்டிலும் கொடுத்தது கிடையாது.

லிஸ்ட் சொல்லும்பொழுது அந்த வீட்டுக்கு குழந்தைகள் குறுக்கே கத்தினாலோ, ஓடினாலோ அவ்வளவுதான். ‘கொழந்தயப் பெக்கச்சொன்னா குரங்கப் பெத்து நம்ம உயிர எடுக்குறாங்க என முணக ஆரம்பித்து விடுவான். கொஞ்சம் ஏப்ப சாப்ப வீடாக இருந்தால் குழந்தைக்கு பொடனியில் ஒரு அடி இனாம்.

லிஸ்ட்டில் எழுதியதை வாங்கியவுடன் அதை ஒரு கோடு போட்டு அடித்துவிடுவது வாடிக்கை. இதை அவன் சொன்னால்தால் தெரியும். எழுதியதும், அடித்ததும் ஒரே மாதிரி இருக்கும்.

வாங்கியப் பொருட்களை சரிபார்த்துக் கொடுத்ததும், தொண்டையை லேசாக செருமினான் என்றால் செலவுக்கணக்கு ஆரம்பம் என்று அர்த்தம்.

பஸ் டிக்கெட்
டீ
வடை
பஸ் டிக்கெட்

மிகச்சரியான விலையைப் போட்டு மீச்சத்தைக் கொடுத்துவிடுவான்.

“ஏன் தங்கைய்யா, ஒவ்வொருத்தரு லிஸ்ட்டுக்கும் தனித்தனியா பஸ்ல போவியா”, என்று அவன் சூட்சமம் தெரிந்து கேட்டால், கோவமும் இல்லாமல் சிரிப்பும் இல்லாமல் மய்யமாக முகத்தை வைத்துக்கொண்டு, “ஏதோ சரீரப் ப்ரயாச பண்றேன் விட்றா”

நாலணா எட்டணா ஒரு ரூபாய்த் தொடங்கி, அம்பது நூறு என கமிஷன் காசுகளை கையிலும் வேட்டியிலும் முடிந்து வைத்துக்கொள்வான். எவ்வளவு போராடினாலும் ஒரு ரூபாய் கூட வாங்க முடியாது அவனிடம் இருந்து. வாரம் முழுக்க ஒரே வேட்டி, அதே சட்டைதான். அவ்வளவு சீக்கிரம் அழுக்காக்கிவிட மாட்டான். ஆனாலும் மாற்றுவது என்னவோ அடுத்த வாரம்தான்.

டி.வி சத்தம் கேட்டு எழுந்த தங்கைய்யா பக்கத்தில் காஃபி வைக்கப்பட்டது. எனக்கு இன்னும் காய்ச்சல் என்பதால் கொஞ்சமாக கஞ்சியை வைத்துவிட்டுப்போனாள் அக்கா. ‘பேய் இருக்கா இல்லியா’ என சந்திரமுகி ரஜினியிடம் வடிவேலு கேட்டதும் தங்கைய்யா மடக்கி வைத்திருந்த முழங்காலில் கையை வைத்துக் கொண்டு குலுங்கி சிரித்தான்.

‘வடிவேலுன்னு பிடிக்கும்போலயே தங்கய்யா’ கேட்டதை சட்டை செய்யாமல் கொஞ்ச நேரம் சிரித்துவிட்டு, “அது ஆச்சுடா ஒரு நாப்பது வருசம், நீங்க எல்லாம் என்ன சேட்ட பண்றீங்க? எங்க அப்பாகூட ஏதோ கோவிச்சுக்கிட்டு வந்துட்டேன். கோவம் தீர்ந்த பாடில்ல. என் தலமுடில நாலஞ்ச கட் பண்ணி ஒரு கவர்ல போட்டு அவர் பேருக்கு போஸ்ட் பண்ணி விட்டேன். From ல பில்லி-சூன்யம் டிப்பார்ட்மெண்ட்னு போட்டு அனுப்பினேன். கைல வாங்கி பிரிச்சுப் பார்த்தவரு ஒரு வாரம் படுத்த படுக்கயா ஆகிப்போய்ட்டாரு. ஹும்ம்ம்” சொல்லி, சிரித்துக்கொண்டே காஃபியை ஆத்தத் துவங்கி இருந்தான்.

சுவாரஸ்யம் தொற்றிக்கொண்டது. அவனோடு சேர்ந்து நானும் சிரித்துக்கொண்டே, ‘அப்ப உன்ன எல்லாரும் டி ஆர் ஆர்னு தான் கூப்புடுவாங்களாமே நெசமா தங்கையா?” என்றதும் நிமிர்ந்தவன் கண்கள் பிரகாசமாய் மின்னியது.

பரவாயில்லையே.. யார் சொன்னது? டி ஆர் ராமச்சந்திரன் மாதிரியே இருப்பேன். அவர மாதிரியே பேசுவேன்ப்பா என திடீரென ’பேசுவேன்ப்பா’வுக்கு அழுத்தம் கொடுத்து பேசினான். பேசிக்கொண்டிருக்கும்பொழுதே உள்ளே இருந்து சத்தம் வந்தது. ‘ தங்கைய்யா, நல்லா ரெஸ்ட் எடுத்து ரெடியா இரு, அடுத்த வாரம் மதியோட கல்யாணம், ஞாபகம் இருக்கா இல்லியா?”

“மறக்குமா, அதுக்கு வேற நிறைய்ய சாமன் சட்டுன்னு என் உயிர் போகுமே’வில் குதூகலமானான்.

"ஓக்கே டிஆர்ஆர்" என்றதும் "சும்ம்ம்மா இர்டா நீ ஒரு பக்கம்" என சிரிப்போடு தலையில் அடித்துக்கொண்டே வேட்டியை ஒரு உதறு உதறிக் கட்டிக்கொண்டு கிளம்பினான். அடுத்து யார் வீட்டில் அமர்ந்து பேசுகிறானோ அங்கே இரவு உணவு. அப்புறம் தெருவில் அன்றைய மூடுக்கு ஏற்ப யாரிடமாவது பேசுவான். சீக்கிரம் தூங்கிப்போவான். அவ்வளவு அலைச்சல்.

காலம் ஓடியதில் அவன் சொந்தம் சுயம் எதுவும் எவருக்கும் தெரியாமல் இந்தத் தெருவில் ஒருவனாய் ஆகிவிட்டவன். எல்லோரையும் பிடிக்கும். எல்லோரையும் திட்டுவான். தெருமுனையில் இரவு கேரம் போர்டு விளையாடிக்கொண்டிருக்கும் பொழுது, தூக்கம் வரவில்லை என்று வந்து அமர்ந்தால் அன்றைய இரவு கலகலவென்று போகும்.

பெண்கள் குறித்தப் பேச்சு வந்தால் மட்டும் கவனமாகத் தவிர்த்துவிடுவான்.

‘ஏ தங்கய்யா, சும்மாச் சொல்லுயா, பஸ்சுல உராசுறயாமே, குண்டுமணி நேத்து பார்த்துட்டுச் சொன்னான்யா’

‘முட்டாத்தனமாப் பேசாதீகப்பா, ச்சே,” வெடுக்கென்று பதில் வரும்.

யாரு வீட்ல விசேசம்னாலும் வேட்டி வேட்டியா வாங்குறயே தங்கைய்யா, ஒரு நாளாச்சும் பளிச்சுனு கட்டி வந்துருக்கியா, இப்பிடி அழுக்காவே இருக்கியே’வுக்கும் பதிலே வராது.

துவரை இல்லாத மழையான மழையோடு விடிந்தது அன்று. தெருவெல்லாம் சாக்கடையை அடித்துக்கொண்டு மழைத்தண்ணீர். பேப்பர் போடும் பையன் பேப்பரைக் கொடுத்துக்கொண்டே, ‘ தங்கைய்யா மண்டையப் போட்டுருச்சுயா. சரசு வீட்டுத் திண்ணைல- விடியக்காலைலதான் பார்த்தாங்களாம்’ சொல்லிவிட்டு சைக்கிளை ஏறிமிதித்துப் போய்விட்டான்.

இருப்பேக் கொள்ளவில்லை. அனிச்சையாக சட்டையை மாட்டிக்கொண்டு சரசு வீட்டுக்குப் போவதற்குள் மழையிலும் தெருக்காரர்களில் சிலர் கூடி இருந்தார்கள். ‘அய்யய்ய, நோ நோ இப்போ யாரும் கிடையாதுங்க, எனக்கு நல்லாத் தெரியும், அதெல்லாம் யாருக்கும் ஒண்ணும் சொல்ல வேண்டியதில்லை’ என ஆளாளுக்கு ஒன்றைச் சொல்லி, தங்கைய்யாவைத் தூக்கிப் போட்டு எரித்துவிட்டு வந்தோம்.

அவன் முடங்கி இருந்த திண்ணையில் அவனுக்கான ஒரே சொத்து என இருந்த ட்ரங்க் பெட்டி. ஒரு நாளைக்கு எப்படியும் நாற்பது முறையாவது அதைத் திறந்து மூடுவான். உடைத்துப் பார்த்ததில், ரெக்கு மாறாத புதிய வேஷ்டிகள் இருபதுக்கும் மேல் இருந்தன. எடுத்து உதறினால் மடிப்பு எல்லாம் கிழிந்து விடும் போல பழசாக, ஆனால் புதிய வேஷ்டிகள். எழுபதுகளில் தொடங்கி இந்த ஆண்டுவரை டயரிகள். புத்தம் புதிதாக. வேஷ்டிகளுக்கும் டயரிகளுக்கும் நடுவில் பழைய பெரிய நூறுரூபாய் நோட்டில் இருந்து இன்றைய சிகப்பு இரண்டு ரூபாய் நோட்டுகள் வரை பணம் எப்படிப் போனாலும் லட்ச ரூபாய்க்கும் மேல் இருக்கும். குற்றாலத் துண்டு பரப்பி இருந்தது. அதற்கு அடியில், மிக இளமையான தங்கைய்யா புகைப்படம். அதற்கும் அடியில் மிக அழகான ஒரு இளம்பெண் படம். அந்தப் படத்திற்குப் பின்னால் அழகான குண்டு குண்டு எழுத்தில் ’அடுத்த ஜென்மத்தில் இந்தப்பாழாய்ப்போன பணத்தோடு சந்திப்பேன் கண்ணம்மா-இப்படிக்கு உன் தங்கம்’


..

கடல் மேல் இறக்க வைத்தான்?

கடல் செந்நிறமாய்.
துப்பாக்கி வயிற்றில் சுடுகிறது
சூரியன் முதுகில்.

**

சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைத்து
அதில்
பாடைகள் ஏற்றி வருவோம்?

**

அடுத்து என்ன என்பதைப் பகிர ஞாயிறு அன்று மெரினாவில் கூடியிருந்த நம் நண்பர்கள் பேசியது கீழே தொகுக்கப்பட்டுள்ளது.(நன்றி கேவிஆர் Buzz.)

http://allinall2010.blogspot.com/2011/01/tnfisherman_31.html நன்றி ALLINALL ராஜா.

#tnfisherman தொடர்பான ட்விட்டர்கள் மற்றும் பதிவர்களின் சந்திப்பு நேற்று (30/01/2010) மாலை சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்றது. அதில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்களும், அதனை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச்செல்வதில் அனைவரின் பங்கும் எப்படி இருக்கலாம் என்பதை இங்கு குறிப்பிடுகின்றோம்.


#tnfisherman தொடர்பான ட்விட்டர்கள் மற்றும் பதிவர்களின் சந்திப்பு நேற்று (30/01/2010) மாலை சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்றது. அதில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்களும், அதனை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் அனைவரின் பங்கும் எப்படி இருக்கலாம் என்பதை இங்கு குறிப்பிடுகின்றோம்.


1. முழுமையான தகவல்கள் தொகுப்பு.

இதுவரை இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்ட 539 மீனவர்கள் பற்றிய முழுமையான தகவல்களைத் திரட்ட வேண்டும். அவர்களது பெயர், ஊர், சம்பவம் நடைபெற்ற நாள், இடம் உள்ளிட்டவற்றோடு பத்திரிகைச் செய்திகள், பேட்டிகள் உள்ளிட்ட தரவுகளை முழுமையாக சேகரிக்க வேண்டும். நடைபெறும் பிரச்சனையை பேசுவதற்கு அடிப்படையான தகவல்கள் இவை.


பங்களிப்பு: நேற்று வந்திருந்த நண்பர்களில் சிலர் ஒரு சில பகுதிகளுக்கு நேரில் சென்று தகவல்களைத் திரட்ட பொறுப்பெடுத்துக் கொண்டனர். மேலும் சிலர், 539 மீனவர்களின் பெயர்கள் கொண்ட பட்டியல் இருப்பதாகவும், அதனை அளிப்பதாகவும் ஒத்துக்கொண்டனர். பொறுப்பேற்றுக் கொண்ட நண்பர்கள் தவிர மற்றவர்கள் இது சம்பந்தமான தகவல்கள் உங்களிடம் இருந்தாலோ, அல்லது திரட்டித் தர முடிந்தாலோ பதிவின் கடைசியில் இருக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு அவற்றை அனுப்பி வையுங்கள்.


2. பொதுநல வழக்கு (Public Interest Litigation)

மீனவர் பாதுகாப்பு குறித்து பொது நல வழக்கு ஒன்றும் தாக்கல் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றைய சந்திப்புக்கு சில வழக்கறிஞர்களும் வந்திருந்தனர். இது சம்பந்தமாக நிலுவையில் இருக்கும் ரிட் மனுக்கள் பற்றியும், சட்ட விபரங்களும் அலசப்பட்டன.


பங்களிப்பு: வந்திருந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களில் ஒருவர், தான் இப்பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். வரும் சனி அல்லது ஞாயிறு வழக்குத் தொடர்பான கூட்டம் ஒன்று நடைபெறும். மேலும் சில வழக்கறிஞர்களும் அக்கூட்டத்திற்கு வருவார்கள். சட்ட நுணுக்கங்கள் தெரிந்த மற்ற ஆர்வலர்களும் அதில் கலந்துகொள்ளலாம்.


3. ஊடகங்களோடு தொடர்பு
நமது தொடர்ந்த கவன ஈர்ப்பின் மூலம் சில ஊடகங்கள் மீனவர்களைப் பற்றி கட்டுரைகள் வெளியிட்டு வருகின்றன. ஆனால், வட இந்திய ஊடகங்கள் இன்னும் பாரா முகமாகவே இருக்கின்றன. தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களின் எடிட்டர்களை சந்தித்து இந்நிலையை விளக்கிச் சொல்லி, மீனவர் பாதுகாப்பு தொடர்பான செய்திகளை வெளியிடச் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை நாம் சந்தித்து ஒத்துக்கொள்ள வைப்பதற்கு #tnfisherman தொடர்ந்து ட்ரெண்டில் இருக்கவேண்டியது அவசியம்.


பங்களிப்பு: தமிழ் ஊடகங்களை தொடர்பு கொள்வதற்கென ஒரு குழுவினரும், ஆங்கில ஊடகங்களை தொடர்பு கொள்வதற்கு சிலரும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். கடந்த 5 நாட்களாக ட்ரெண்டில் இருந்து வந்த #tnfisherman இன்று காலையில் சில நிமிடங்கள் ட்ரெண்டில் இல்லாமல் போனது. அப்படி நேராமல், குறைந்த பட்சம் இந்த வாரம் முழுவதும் ட்ரெண்டில் நிலைத்து நிற்பதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் அவசியமாகின்றது. உங்களுக்கு 5 நிமிடம் ஓய்வு கிடைத்தாலும் 10 ட்வீட்டுகளாவது அனுப்பி இதனை தொடருங்கள். இது மிக மிக முக்கியமான விஷயம். நாம் சென்று எடிட்டர்களோடு பேசும்போது நான்கு நாட்கள் இருந்துவிட்டு இப்பொழுது இல்லாத ஒன்றைப் பற்றி பேச வேண்டாம் என்று ஒதுக்க முடியாத அளவிற்கு நம்முடைய தொடர் போராட்டம் இருக்கவேண்டும்.


4. ஆன்லைன் பெட்டிஷன்.

பிரதமருக்கு அனுப்புவதற்கென நாம் உருவாக்கியுள்ள ஆன்லைன் பெட்டிஷனில் இன்னும் பல்லாயிரக்கணக்கான கையொப்பங்கள் தேவைப்படுகின்றன. இதனை இன்னும் முன்னெடுக்க வேண்டியது அவசியம்.


பங்களிப்பு:
நீங்கள் கையொப்பம் இடுவது மட்டுமின்றி உங்கள் நண்பர்கள், உடன் பணிபுரிவோர், உறவினர்கள் ஆகியோரிடமும் இதனைப் பற்றி எடுத்துரைத்து கையொப்பம் இடச்செய்யுங்கள். இப்பிரச்சனை உங்கள் சுற்று வட்டாரத்தில் விளக்கிச் சொல்லி இன்னும் பல கையொப்பங்கள் பெற்றுக் கொடுங்கள்.


5. அரசியல் கட்சியினரை சந்தித்து அவர்களை குரல் கொடுக்கச் செய்வது.
இதுவரை இப்பிரச்சனையில் கவனம் செலுத்தாத அரசியல் கட்சிகளின் தலைமையை அணுகி, இப்பிரச்சனை குறித்து அவர்களின் நிலைப்படை அறிவது, மற்றும் அவர்களையும் குரல் கொடுக்கச் செய்வது.


பங்களிப்பு: சில நண்பர்கள் தங்களது தொடர்புகள் மூலம் சில அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்க முயல்கின்றனர். உங்களுக்கு அது போன்ற தொடர்புகள் இருந்தால் தெரியப்படுத்தி சந்திப்புகளுக்கு வகை செய்யுங்கள்.


6. சுஷ்மா ஸ்வராஜ் - நேரில் சந்திப்பது.
வரும் 4 ம் தேதி அன்று பாரதீய ஜனதாவின் சுஷ்மா ஸ்வராஜ் நாகப்பட்டிணம் வருகின்றார். அப்பொழுது வட இந்திய ஊடகங்களும் அவரது பயணத்தைப் பற்றி செய்தி வெளியிடுவார்கள். இந்தத் தருணத்தில் அவரை நேரில் சந்தித்து, முழுமையான தகவல்கள் அடங்கிய விளக்கங்களை நாம் நேரில் அளித்தால், மீனவர் பிரச்சனையை பற்றி விரிவான விவாதத்திற்கு வழி ஏற்படக்கூடும்.


பங்களிப்பு: அவரது சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய ஒரு நண்பர் முன்வந்துள்ளார். உங்களுக்கு தொடர்புகள் இருந்து அவரை சந்திக்க ஏற்பாடு செய்ய முடிந்தால் தகவல் தெரிவித்து ஏற்பாடுகள் செய்யுங்கள்.


==================================================================================
#tnfisherman போராட்டமானது அனைவரின் பங்களிப்போடும் நடைபெறுவது. தொடர்ந்து இதனை முன்னெடுத்துச் செல்வதே, ஒரு தீர்வு கிடைக்க வழி செய்யும். இங்கு நாம் குறிப்பிட்டுள்ள பங்களிப்புகளில் உங்களுக்கு எப்படியெல்லாம் முடியுமோ, அப்படியெல்லாம் பங்களித்து வாருங்கள். நம் சகோதரர்களைக் காக்க ஒன்றிணைந்துள்ள நாம் வெற்றி காண்பது அனைவரின் பங்களிப்பிலுமே உள்ளது. தொடர்ந்து ட்விட்டரிலும், மற்ற வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்குங்கள்.


நேற்றைய சந்திப்புப் பற்றிய twitlonger
http://www.twitlonger.com/show/8g8uc1


நேற்று நடைபெற்ற கூட்டம் பற்றிய பத்ரியின் பதிவு
http://thoughtsintamil.blogspot.com/2011/01/blog-post_31.html


நீங்கள் தகவல்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரிகள் :
savetnfisherman@gmail.com

tnfishermancampaign@gmail.com


பெட்டிஷன் அனுப்பும் சுட்டி
http://www.petitiononline.com/TNfisher/petition.html


******

பயத்தில் சுட்டோம்
என்று சொல்வார்களாயின்
சாகும்வரை சுடுவார்களே-
அவர்கள் சாகும்வரை.

**

ஆடுகளம் : துரோகத்தின் வினைத்தொகை

எல்லாப் படங்களையும் பார்த்துவிட்டாலும் சில படங்களைப் பார்க்கும்பொழுது மட்டும்தான் அதுகுறித்து எழுதத் தோன்றுகிறது. ஆடுகளம். துரோகம் ஆடியது,ஆடுகின்றது,ஆடும் என்ற வினைத்தொகையின் பண்பு, உலகம் இருக்கும் வரை. ஒருவரின் அன்பில்,அவர் நம்மீது கொண்டிருக்கும் அக்கறையில் திக்கித்திணறி நாம் மூர்ச்சையாகிப் போகும்பொழுது முதுகில் விழும் குத்து...ஆடுகளம்.

சேவல் சண்டையைப் பற்றிய வரலாற்று குறிப்போடு டைட்டில் தொடங்குகிறது. பொல்லாதவன் பாணியில் முதலில் க்ளைமேக்ஸ்..அதிலிருந்து பின்னோக்கி என வெற்றி ஃபார்முலாவை மீண்டும் கையாண்டிருக்கிறார்,வெற்றி-மாறன்.

கதையைப் பற்றிப் பேசுவதை விட அதற்கும் அப்பால் பேச நிறைய இருக்கிறது இப்படத்தில்.

சினிமாவில் வில்லன், நாயகன், குணச்சித்திரம் என அவரவர் பாத்திரம் உணர்ந்து எப்பொழுதுமே நல்லவனாகவும் எப்பொழுதுமே கெட்டவனாகவும் சித்தரிக்கப்பட்டுவந்ததில் இருந்து முற்றும் மாற்றாக, அன்றாடத்தில் எப்படி அவ்வந்த சூழலுக்கு ஏற்ப வாழ்கிறோம் என்பதை மிக நுட்பமாகக் காட்சிப்படுத்தி இருப்பதே இப்படத்தின் ஆகச் சிறப்பு.

கிஷோர்/துரை பாத்திரம்
. கொஞ்சம் பணமும் பார் வைக்குமளவிற்கு செல்வாக்கும் இருக்கும் ஒரு மதுரைக்காரன் எப்படி இருப்பானோ அப்படியே இப்பாத்திரம். மிகக் கூர்ந்து கவனித்ததில் இந்தப் படத்தின் அற்புதமானப் பாத்திரம் என்றால் அது துரைதான். ஒரு இடத்தில் கூட இயல்பிற்கு மீறியச் செய்கையைச் செய்யவில்லை.

எதிர் அணியில் இருந்த இன்ஸ்பெக்டர் தன்னை ஸ்டேஷனில் இருந்து விடுவிக்க உதவியதும் மறுநாள் அவர் வீட்டிற்கே சென்று நன்றி தெரிவிப்பது.

தன் கூட்டாளி அயூப்பை அதே இன்ஸ்ப்பெக்டர் கொன்றது தெரிந்து, தண்ணியடித்துவிட்டு, ‘இப்பிடி எல்லாத்தையும் செஞ்சுப்புட்டு ஒண்ணுமே தெரியாதமாதிரி நிக்கிறாங்களே’ என அவரை அடிக்கப்போவது.

குருவின் பேச்சைக் கேட்காத தனுஷின் முதல்சுற்று போட்டிக்கு, ‘விடுண்ணே சின்னப்பய,தெரியாம பண்ணிட்டான்’ என ஆதரிப்பது. மீண்டும் திமிறில் தனுஷ் களம் இறங்கும்பொழுது, ‘என்னடா ஓவராப் போற’ என தனுஷை எதிர்ப்பது.

மீண்டும் தனுஷ்க்கு வாழ்க்கையில் செட்டில் ஆகும் வாய்ப்பு வரும் எனத் தெரிந்ததும், தனுஷை ஆதரித்து, மூன்று லட்சம் வாங்கித் தருவது.

குரு அளவிற்கு மீறி கோவப்பட்டதும், ‘எனக்கென்னமோ நீ பண்றது தப்புன்னு தோணுதுண்ணே’ என குருவிடம் நியாயத்தைப் பேசுவது.

கடைசிவரை துரைக் கதாப்பாத்திரம் எந்த இடத்திலும் பிசகவே இல்லை.

பேட்டைக்காரன் என்ற பெரியசாமி : நான் சில மாதங்களுக்கு முன்னர் ‘அம்பத்தாறு’ என்ற கதையை எழுதி இருந்தேன். அந்த அம்பத்தாறு பாத்திரத்தின் குணாதிசயம், அடிப்படையில் நல்லவன், ஆனால் எவராவது ஊரில் நல்லபெயர் வாங்கினால் பொறுக்காது, தனக்கு யாராவது துரோகம் செய்வதாகப் பட்டால், நேரடியாக மோதாமல் கெடுதல் செய்வது.

இந்த குணாதிசயத்தையும் தாண்டிய படைப்பு பேட்டைக்காரன். அடிப்படையில் திறமையான, நல்லவர் தன் சிஷ்யன் தன்னை மீறும் பொழுது ஏற்படும் மனஉளைச்சலை எப்படி துரோகமாக மாற்றுகிறார் என்பதே.

இவர் பேச்சை மீறி தனுஷ் களத்தில் இறங்கும்பொழுது, கோயில் முன்னர் நின்று கொண்டிருப்பார் பேட்டைக்காரன். ‘அண்ணே நம்ம சேவ ஜமீனாகிப்போகும் போலண்ணே, தோத்துறும்’ என ஒருவன் வந்து சொன்னதும், லேசான திருப்தியோடு கடவுளைப் பார்க்கும்பொழுது அவரின் குரூரம் தெரிகிறது. ஆனாலும் தனுஷ் முதல் சுற்றில் வெற்றிப் பெற்றதும், தன் மானம் காப்பாற்றப்பட்டது போன்ற திருப்தியும் அடுத்த முகபாவனையில்.

‘அதிர்ஷ்டம் அவன செயிக்க வச்சுருச்சுடா’ என மீசை மண் வசனத்தில் சமாளிப்பது.

‘இல்லண்னே, அன்னிக்கு மாதிரி ஏதாச்சும் மாத்தி ஆகிப்போச்சுண்டா’ என சேவல் வாங்க வருபவன், இவரின் பேச்சை மீறி வேறு சேவல் கேட்கும்பொழுது, மனம் முழுதும் வன்மம் குடிகொள்வதை டாப் ஆங்கிளில் பேட்டைக்காரனின் முதுகில் காட்டி இருப்பது.

இந்தக் கதாப்பாத்திரத்தின் மிகச்சிறந்த டீட்டெய்லிங், கடைசியில் எல்லா உண்மையும் தெரிந்த தனுஷை குத்தக் கத்தியைக் கையில் எடுக்கும் பேட்டைக்காரன், தனுஷ் சொல்லும், ‘வெளில தெரிஞ்சா இம்புட்டு நாளா உனக்கு இருந்த பேரு என்னண்ணே ஆகும்,’ என்ற வார்த்தைகளைக் கேட்டதும், கத்தியின் முனை திசை மாறும். அவ்வளவே. தன்மீது இருந்த பிம்பம் சிதைபடும்பொழுது ஒருவன் என்ன செய்வானோ அதைச் செய்துகொள்ளும் அற்புத பத்திரப்படைப்பு பேட்டைக்காரன்.

தனுஷ்/கருப்பு : I AM LOVE YOU என்ற மதுரை திருப்/தென்பறங்குன்ற கைலி இளைஞன். எல்லாக் கோவத்தையும் தாயிடம் காட்டும் சராசரியாக, டைவாவைக் கரெக்ட்பண்ணும் காதலனாக, நல்லது செய்யும் கிஷோரை அண்ணண் நிலையில் வைக்கும் நண்பனாக, துரோகம் தெரியவந்ததும் வெடித்துச் சிதறும் சிஷ்யனாக...

மிகக் கச்சிதமாய் செய்திருக்கிறார் தனுஷ். மதுரை பாஷை கொஞ்சம் தடுமாறினாலும், ஒன்றச் செய்துவிடுகிறது. தனுஷிடம் இருக்கும் நடிப்புத் திறமையே இவரை இந்த இடத்தில் வைத்திருக்கிறது என்பதை நிரூபிக்கும் படம் இது. புதுப்பேட்டையில் ஒரு பெரிய கூட்டமே அடித்துத் துவைத்தும், முகமெல்லாம் ரத்தமாக, எழுந்து நிற்கும்பொழுது ஒரு சிங்கத்தின் பார்வையை ரீரிக்கார்டிங்கோடு செல்வராகவன் கொண்டு வந்திருப்பார். அந்தக் காட்சி தனுஷின் மிகச்சிறந்த நடிப்பிற்கு ஒரு உதாரணம். அதைப்போல இந்தப் படத்தில் நிறைய இடங்களில்.

அயூப் : ஃபாரின் சரக்கை ஆசையாக, இதை திருப்பி கேட்க மாட்டியே என வெள்ளந்தியாக கேட்பதாகட்டும், தன்னை விலை பேசுவது தெரிந்த அடுத்த நிமிடத்தில், “என்னடா வேணும் உங்களுக்கு” என அதே பாட்டிலை தரையில் எறிந்து விட்டு, நாலு கிளாஸ் சாராயத்துக்கே இம்புட்டு கேட்குறீங்களேடா, நாப்பது வருச பழக்கம்னா எம்புட்டு இருக்கும்’ என்று நிற்பது கம்பீரம்.

ஊளை : மதுரையில், கிட்டத்தட்ட எல்லா கேங்கிலும் ஒரு ஊளை கேரக்டர் உண்டு. அவ்வளவு தத்ரூபமாக செய்திருக்கிறார். ‘எந்தத் தெருடா ஏழுமணிக்கு வெறிச்சோடி இருக்கு, தப்பாத் தெரிதே மாப்ள’ இந்த ஒரு வசனம் போதும். அவ்வளவு கச்சிதமான ஏற்ற இறக்கம். படம் முழுதும் வரும் இப்பாத்திரம் தனுஷ் என்ற பாத்திரம் எது செய்தாலும் அதற்கு உடன்பட்டு எப்பொழுதும் உடன் இருக்கும் நண்பன் பாத்திரம். காதலியைத் தேடிப்போகும் பொழுது உடன் வந்து கம்பெனி கொடுப்பதில் துவங்கி இறுதியில் வழியனுப்பி வைக்கும் வரை இருக்கும் மதுரை நட்பை அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கும் இந்தப் பாத்திரமும் கிஷோருக்கு அடுத்தபடியாக அமைந்திருக்கும் அற்புதம்.

தவிர, சில சுவாரஸ்யங்கள் :

1.சேவல் சண்டையின் நுட்பங்களை உள்வாங்கி அற்புதமாக திரையில் கொண்டு வந்திருப்பது. குறிப்பாக இருவாசியின் பொழுது ஜெயிப்பது யார் என சீட்டின் நுனிக்கு நம்மை இட்டுச் சென்றது.

2. மதுரை என்றாலே அங்கிட்டு இங்கிட்டு அறுவா என்பது மட்டும் அல்ல, அதையும் தாண்டிய ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை காட்டிய விதம்.

3. சேவல் சண்டை நடக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஃப்ளெக்ஸ் பேனரில், கிஷோர் ராஜா உடை அணிந்து நிற்பார். பேட்டைக்காரன் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பார். மதுரையின் அன்றாட காட்சிகள் இவை. இதில் துவங்கி ஒவ்வொரு காட்சியில் நுட்பங்களை காட்சிப் படுத்திய விதம்.

4. ஒவ்வொரு பாத்திரத்தின் தேர்வும், அவர்கள் ஒரு இடத்தில் கூட தேவையில்லாமல் கையை என்ன பண்ணுவது என்று தெரியாமல் நிற்பதோ, மற்றவர் வசனம் பேசும்பொழுது அடுத்த வசனத்திற்கு ரெடியாக துடித்துக்கொண்டு நிற்பதோ இல்லாமல், வெகு இயல்பாக வந்து போவது.

5. வாழ்வினூடாக பாடல் இருப்பதை அப்படியே வசனங்களுக்கு ஊடாக சேர்த்து இருப்பது..யாத்தேப் பாடலின் பொழுது தனுஷின் குதூகலம் நம்மையும் தொற்றச் செய்துவிடும் கேமிரா/டான்ஸ்/இசை.

6. இரண்டாம் பாதியில், ஒரு இடத்தில் கூட நாம் நினைப்பது நடக்காதது போல அமைத்திருக்கும் திரைக்கதை. இன்ஸ்பெக்டர் மொட்டை அடித்ததும் அறுவா பறக்கும் என்று எதிர்பார்த்தால் ..இல்லை. இதே நிலம உனக்கும் வரும்ணே..என தனுஷ் கிஷோரைப் பார்த்து சொல்லும் பொழுது கிஷோரின் நிலை அப்படி ஆவது இல்லை, காதலி இனி அவ்வளவுதான் எனில் அவ்வளவு இல்லை என மிக இயல்பாய் சம்பவங்களைக் கடந்திருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.

7. ‘என்கிட்டயே உன்னத் தப்பாச் சொல்றாரு’ என காதலியின் நம்பிக்கை.இந்த வசனம் வந்ததும் கைத்தட்டல் எழுகிறது அரங்கில். சாதாரண வார்த்தைகளில் வாழ்வைக் காட்டுவதே வசனம். விக்ரம் சுகுமாரன் & வெற்றி மாறன் இருவரின் வசனங்கள் இயல்பான உரையாடல்களாக அற்புதமாய் இருக்கிறது.

8. மதுரை என்றாலே இரவு. அதை அற்புதமாய் பாடலில் கொண்டு வந்திருக்கும் நேர்த்தி.

9. ராதாரவின் வெகுநேர்த்தியான பின்குரல்.

10. மீனாள் கதாப்பாத்திரம்.

நன்றி வெற்றிமாறன்.

சுமி மீண்டும் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொண்டாள். கண்களைச் சுருக்கி இன்னும் கண்ணாடிக்கு அருகில் போய், வலது கண்ணிற்கு கீழே தனது ஆள்காட்டி விரலை வைத்து லேசாக இழுத்துப் பார்த்தாள். பிங்க்கும் சிகப்பும் கலந்த நிறத்தில் இருந்த கண்ணில் நீர் கோர்த்துக்கொண்டிருந்தது. துடைத்துக்கொண்டாள். கண்ணாடியில் ஒட்டி இருந்த ஸ்டிக்கர்ப் பொட்டை எடுத்து வைத்துக்கொண்டாள்.

ங்க அம்மா பேரு சுமித்ரா. தூக்கு போட்டு செத்துட்டாங்க. இப்போ ஸ்கூலுக்குப் போய்ட்டு இருக்கேன். இந்த ரோட்லதான் எங்கம்மா கூட்டிப் போவாங்க, நான் இப்பல்லாம் சிரிக்கிறதே இல்ல. நேத்துகூட என் பென்சில எடுத்தான்னு அட்சயாவ ரொம்ப அடிச்சிட்டேன். நான் அப்பிடில்லாம் அடிக்கவே மாட்டேன் தெரியுமா. பிளேடு வச்சு கீறலாம்னு கூட நினைச்சேன். மிஸ் கிள்ளினாங்க. அம்மான்னு கத்தும் போது அழுக வரல. இதோ இப்ப லஞ்ச்ல தனியா சாப்பிட்டுட்டு இருக்கும்போது அழுகையா வருது. மிஸ் கிள்ளினதுக்கு இல்ல, அம்மான்னு கத்துனதுக்கு. நான் சொல்லிட்டே இருந்தா நீங்க கேப்பீங்களா..போங்க.”

ரவு பேசிய வார்த்தைகள் அவளைச் சுற்றிக்கொண்டே இருந்தன.

“கஷ்டமா இருக்குங்க. இதெல்லாம் தப்பில்லை, தனிமனித உரிமைன்னு காலேஜ்டேஸ்ல உங்கள விட அதிகமா நானும் சி்ந்திச்சிருக்கேன். பேசி இருக்கேன். பட் நாட் ஏபிள் டு டேக் இட். ஸாரி”

நிதானமாக பேசுவதாக நினைத்தாள். படபடவென விழுந்தன வார்த்தைகள்.

‘எத்தன தடவ சொல்றது சுமி. எனக்கு இதனால பிரச்சனை இருக்குற மாதிரியே தெரியல. லவ் பண்ணும்போது எப்பிடி இருக்கேனோ இப்பவும் அப்படித்தான் புரிஞ்சதா,. ஸாரி, பட் முதல்நாளே சொன்னேனே. பிளீவ் மி திஸ் இஸ் நத்திங்ங்ங். இதே ஊர்ல இன்னும் நிறைய மாறும். அப்போ யு வில் பி மோர் ஃப்ரிலி டேக்கிங் திஸ், ப்ளீஸ் லீவ் திஸ்”

படபடவென பேசினான். வார்த்தைகள் தெளிவாக விழுந்தன.

“என் நிலமைல இருந்து பாருங்க. எவ்வளவோ ட்ரை பண்றேன். ஆனா ஒவ்வொரு தடவையும் என்னால நினைக்காம இருக்க முடியல.”

சொல்லும்பொழுதே கண்ணிலிருந்து கோடாக இறங்கியது கன்னத்தில்.

“இப்போ எதுக்கு அழுது உன் கிளாமர குறைக்கிற, கொஞ்ச நாள்ல சரியாகிடும் உனக்கு. பை த வே, இன்னிக்கு மேடம் ஃபெரெஸ்ஸா வாசனையா இருக்குறாப்ல இருக்கு.’ சொல்லிக்கொண்டே பின்னாலிருந்து அணைத்தான். வெடுக்கென கையை உதறிக்கொண்டாள்.

இரவு உதறிக்கொண்டதை இப்பொழுது நினைத்து, இப்பொழுதும் அவள் கைகள் விலக்கியது காற்றை.

கண்ணாடியில்த் தன்னை பார்த்துக் கொண்டே இருந்தாள்.

போங்கன்னு சொன்னேன். போய்ட்டீங்க. க்ளாஸ்ல மேத்ஸ் சம் போட்டுட்டு இருக்கும்போது உங்கள போங்கன்னு சொன்னது தப்புன்னு தோணிட்டே இருந்தது. ஐ’ம் ஸாரி. இப்போ ஸ்கூல் விட்டாச்சு. என் கூட நடந்து வரீங்களா வீடு வரைக்கும்? வாங்க.

இதான் ஜனா அங்க்கிள் கடை. அப்பாவோட ஃப்ரெண்ட். என்னவேணாலும் எடுத்துப்பேன் இங்க. ஒண்ணுமே சொல்லமாட்டாரு. ஆனா பாட்டிக்குத்தான் இவர பிடிக்காது. அம்மா இவராலதான் செத்தாங்கன்னு திட்டுவாங்க. அப்பாகிட்ட கேட்டா அப்பிடில்லாம் இல்லடா கண்ணான்னு கட்டிப்பிடிச்சுப்பாரு என்ன. அப்பா அடிக்கடி சொல்வாரு, அம்மா ரொம்ப ரொம்ப நல்லவங்கன்னு. வேற யார்க்கிட்டயும் அவ்வளவா பேசக்கூட மாட்டாங்களாம். நிறையப் படிப்பாங்களாம். எனக்கு அம்மாவும் பிடிக்கும் அப்பாவும் பிடிக்கும். வானத்தளவு. நான் திடீர்னு உர்ர்ருனு மொறைக்கிறேன்னு நினைக்காதீங்க. இப்பல்லாம் கொஞ்சம் அப்பிடித்தான் நானா தனியாப் போய் உக்காந்துக்குறேன். அம்மா ஏன் செத்தா? அந்த ஸ்டூல்லதான் நான் இப்பவும் உக்காந்து ஹோம் ஒர்க் பண்ணுவேன். அம்மாவே சொல்லித்தரமாதிரி இருக்கும் தெரியுமா. ப்ச். அந்த ஸ்டூல் மட்டும் கொஞ்சம் ஹைட் கம்மியா இருந்திருந்தா செத்திருக்க மாட்டாளோ. விடுங்க. இப்போ எனக்கு அர்ஜெண்ட்டா ஒன் வருது. நீங்க ஜனா அங்க்கிள்கிட்டபேசிட்டு இருங்க கொஞ்சநேரம்”

ண்ணாடியைப் பார்த்து பெருமூச்சு மூச்சு விட்டாள் சுமித்ரா. ஜனாவின் உருவம் மங்கலாகவும் பிரகாசமாகவும் தெரிந்தது. இவரிடம் எப்படி புரிய வைப்பது என எத்தனையோ விதமாக யோசித்துப்பார்த்தாள்.

தன் கல்லூரிக்காலங்களில் படித்த பேசிய அத்தனை விசயங்களையும் அசைபோட யத்தனித்தாள்.

தனிமனித விருப்பு, சமூகத்தையோ, சார்ந்தவரையோ பாதிக்காதவரை அவரவர் விருப்பப்படியே எதுவும் செய்யலாம் என தான் தன் தோழிகளிடம் பேசியது, காதலிக்கும் பொழுதும் கணவன் என்றானபின்னும் ஒரே மாதிரியாக வெளிப்படையாக இருக்கும் இவனை குற்றமே சொல்லமுடியாது என நினைத்தவளின் தலை தனிச்சையாக ஆடிக்கொண்டது ஆமோதிப்பது போல.

அவனின் விருப்பங்களைப் பற்றியும் உடலியல் குறித்த அவன் கருத்துக்களையும் முன்பே பகிர்ந்ததிலும் தெளிவாகவேத் தான் இருந்திருக்கிறான் என்ற நினைப்பு வரும்பொழுதே தன் மனமும் உடலும் அதை ஏற்காமல் போனதையும், அவன் தொடும்பொழுதெல்லாம் ஜனா, ஜனா, ஜனாவின் நினைப்பு வருவதைத் தவிர்க்க இயலாமல் போனதையும், அவனை முதல் சில மாதங்களுக்குப் பிறகு, தொடக்கூட அனுமதிக்காததையும் , தொட முற்படும்பொழுதெல்லாம் ஏதாவது காரணம் சொல்லி தட்டிவிடுவதும் தவறு என்ற எண்ணம் மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டே இருந்தது.

அவனும் இவளை புரிந்து கொண்டதனாலோ என்னவோ வற்புறுத்துவது இல்லை என்பதை நினைத்ததும் இன்னும் அழுகையும் கூடவே ஜனாவின் சிரித்த முகமும் மிகப் பணிவாக குனிந்து அவன் பேசும் வார்த்தைகளும் இன்னும் அவளை ஏதோ செய்தன. முகத்தைத் துடைத்துக்கொண்டவள் ஸ்டூலை எடுத்து ஃபேனுக்கு நேராகப் போட்டாள்.

னா அங்க்கிள்கிட்ட பேசினீங்களா? அங்க்கிள் நான் கிளம்பறேன். நாளைக்கு லீவு. வரமாட்டேன். இவங்களுக்கு ஏதாவது சாப்பிடக் குடுங்க. அப்..பு..றம்..அங்கிள்..ஒரு ரிக்வெஸ்ட்..இன்னிக்கு நைட் வீட்டுக்கு வராதீங்க ப்ளீஸ்.. அப்பாவோட இன்னிக்கு நான் படுத்துக்குறேனே..ப்ளீஸ்.”

என்’ணங்கள் 12/01/11

1958ம் வருடம்.

பாட்டெழுத சான்ஸ் கேட்டு அலைந்து கொண்டிருந்த அந்தக் கவிஞரை ஒரு இசையமைப்பாளரிடம் அழைத்துச் சென்றார் நண்பர். பட்டுக்கோட்டையும், கே.சி.எஸ் அருணாசலமும் ஜெயகாந்தனும் பாட்டு எழுதிட்டாங்களே என்று இசையமைப்பாளர் எம் பி ஸ்ரீனிவாசன் அந்தப் புதியவரை மறுத்துவிட்டாராம். படம் ‘பாதை தெரியுது பார்’. கோபி என்ற அந்த நண்பரின் வார்த்தைகளுக்காக, இசையமைப்பாளர் எம் பி ஸ்ரீனிவாசன், ’ஏதாவது சமூக நோக்கோடு எழுதிய பாடல் இருந்தால் டைட்டில் சாங்கிற்கு உபயோகப்படுத்திக் கொள்கிறேன்’ என்றவுடன் கொஞ்ச நேரம் யோசித்து ஒரு பாடலை எழுதி, பாடிக்காண்பித்தாராம் கவிஞர்.

கேட்டுவிட்டு, கண்ணாடியை எடுத்து தன் நீண்ட ஜிப்பாவில் துடைத்துக்கொண்டே, “நல்லா இல்லேன்னு சொல்லமாட்டேன், ஆனா இம்ப்ரஸ் பண்ணல, So Sorry” என்று போய்விட்டாராம்.

”கவலைப்படாதீங்க வேறு இடத்தில் ட்ரை பண்ணுவோம்”நண்பர் கோபி அவரை அழைத்துக்கொண்டு போய்விட்டார்.

1967ல் அதே பாடல் பட்டி தொட்டி எல்லாம் தேசிய கீதம் போலப் பாடப்பட்டது.

பாடல் :

கொடுத்ததெல்லாம் கொடுத்தான் -அவன்
யாருக்காகக் கொடுத்தன்...

**
‘ரயில்வே வேலைய விட்டுட்டு இப்பிடி நடிக்க சான்ஸ் கேட்டு வந்திருக்குறது தப்புங்க’ ஒல்லியாக இருந்த அந்த நபரைப் பார்த்து வெகு அக்கறையாகச் சொன்னேன்.

“அந்த ரயிலே ஒரு நாள் எனக்காக நிக்கும்ங்க. என் நடிப்பு மேல எனக்கு நம்பிக்கை இருக்கு”

ரயில்வே வேலையை ராஜினாமா செய்துவிட்டு, பின்னாளில் ரயில் அவருக்காக நிற்கும் அளவிற்கு புகழ் பெற்ற அந்த ஒல்லி நடிகர்- நாகேஷ்.”

கவிஞர் வாலி எழுதிய ‘நானும் இந்த நூற்றாண்டும்’ புத்தகத்தில் இப்படியான வெகு சுவாரஸ்யமான நிகழ்வுகள் அதிசுவாரஸ்யமான நடையில்.

வானதி பதிப்பகம். விலை 250.

**

புத்தகக் காட்சி சித்திரைத் திருவிழா போல் உள்ளது. ரங்கராட்டினமும் வைத்துவிட்டால் அதேதான். உள்ளே நுழையும்பொழுதே ஏகப்பட்ட நோட்டிஸ்களை கையில் திணிக்கிறார்கள். வேண்டாம் பாஸ் என்றால் அடித்துவிடுவார்களோ என்பது போல இருக்கிறது திணிப்பு. வாங்கி, பார்க்காமல் சுருட்டி கசக்கி நாலெட்டு வைத்தவுடன் ஒரு வீசு. பெரும்பான்மை இப்படித்தான் செய்வார்கள் போல. காகிதப் பந்துகள் நிறைய.

ஃப்ருட் சாலட், ஐஸ்க்ரீம்,பாப்கார்ன், பஞ்சு மிட்டாய்த் திருவிழா.

உள்ளே இந்த முறை மிகக் கவர்ந்த, முக்கியமான ஒன்று, ஒவ்வொரு வரிசைக்கும் ஒவ்வொரு பெயர். திருவள்ளுவர் பாதை, கம்பர் பாதை என. சென்ற ஆண்டு இந்த ஏற்பாடு இல்லாததால், ‘எங்க இருக்கீங்க பாஸ்? எந்த ரோங்க? இந்தப் பக்கம் இருந்தா அந்தப் பக்கம் இருந்தா, ஹலோ, ஹல்ல் லோ என சிக்னல் கிடைக்காமல் புத்தகம் தேடுவதை விட நண்பர்களை தேடுவதிலேயே அதிகம் போனது. இந்த முறை திருவள்ளுவரும் கம்பரும் பாரதியும் வழிகாட்டுகிறார்கள்.

**

ஒரு கட்டு வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு புகையிலை
வாய் கழுவ நீர்
பிளாஸ்க் நிறை ஐஸ்
ஒரு புட்டி பிராந்தி
வத்திப்பெட்டி சிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு.

-நகுலன்

**

தீக்கடல் குறித்த தன் பார்வைகளைப் பதிந்த பதிவர் மோகன்குமாருக்கும் பதிவர் லதாமகனுக்கும் நன்றிகள்.

http://veeduthirumbal.blogspot.com/2011/01/blog-post_10.html

http://silarojakkal.wordpress.com/2011/01/01/narsim-theekkadal/

***


பள்ளியில் படிக்கும்பொழுது, வீட்டின் சார்பாக ஒரு கல்யாணத்திற்குச் செல்ல வேண்டிய சூழல்.

முதல் முறை வீட்டை ரெப்ரஷண்ட் செய்கிறோம் என்ற மிதப்பும், அப்பா கொடுத்த மொய்ப் பணக் கவரும்,முதல் முறை வெளியூருக்குத் தனியாகப் பயணம் என ஒரு கித்தாய்ப்பும், கூடவே அங்கே யாராவது தெரிந்தவர்கள் இருக்க வேண்டுமே என்ற லேசான பதைப்பும்.

உள்ளே நுழைந்தவுடனேயே ஒரு பென்சில் மீசை மாமா கழுத்தில் சுற்றி இருந்த கர்ச்சீப்பை உருவிக்கொண்டே என்னை அலேக்காகத் தூக்காத குறை, டேய், எத்தன வருசமாச்சு உங்கள எல்லாம் பார்த்து, வா, வா என கையைப் பிடித்து கல்யாண வீட்டு நெரிசல் ஒதுக்கி, பெண் வீட்டார் அறைக்கு இட்டுச் சென்றார். வழியில் தென்படுபவர்களிடம் எல்லாம் ‘யார் தெரியுதா, யார் தெரியுதா’ என கேட்டுக்கொண்டே. நான் கிட்டத்தட்ட மிதந்து போய்க்கொண்டு இருந்த நினைவு.

அங்கே வட்டமாக அமர்ந்து பேன் பார்த்தும், நெக்லஸைக் கழுத்துப்பக்கத்தில் வைத்துக்கொண்டும், மேட்சிங் பிளஸ் தேடல் எனக் கல்யாண ரகளை. நடுவில் என்னை நிறுத்தி, யாருன்னு தெரியுதா என்றவுடன் ஆளாளுக்கு ஒரு பெயர், பென்சிலோ, சிரிப்பும் சந்தோசமுமாய், சரியாச் சொல்லுங்க, கண்ணப்பார்த்துமா தெரியல, எப்பிடி வளர்ந்துட்டான் பாரு.. என கர்சீப்பை இரண்டு கைகளாலும் ஒரு சுண்டு சுண்டி கழுத்துக்குக் கொடுத்துக் கொண்டே என்னை ஒரு செல்ல இடி, லேசாக கண் வேறு அடித்தார்.

ஒரு வழியாக எல்லோரும் என்னைக் கண்டுபிடிப்பதில் தோற்றவுடன், இவர் திருவாய் மலர்ந்தார்.,.

யாருன்னு தெரியலயா.. நம்ம....... என்று ஏதோ சம்பந்தா சம்பந்தம் இல்லாத ஒரு பெயரைச் சொல்லி, எப்பிடி வளர்ந்துட்டான் பாரு என்றார். அதன்பிறகு அந்தக் கல்யாணத்தில் ஒரு நிமிடம் கூட இருக்க முடியவில்லை. தர்ம சங்கடம் என்றால் என்னவென்று புரியக்கூடிய வயதும் இல்லை அது.

**

தர்ம சங்கடம் என்றதும் இன்னுமொரு அதிமுக்கிய நிகழ்வும் நினைவிற்கு வருகிறது. இதை ஏற்கனவே எழுதிய நினைவும் இருக்கிறது.

பத்தாவதோ பதினொன்றோ படிக்கும்பொழுது ஊரில் இருந்து அத்தை, தன் பெண் சகிதம் வந்திருந்தார். கூடத்தில் மதிய நேரம் டியூப் லைட் எரிந்தால் இப்படி யாராவது சொந்தக்காரர்கள் வந்திருப்பார்கள் என அறிக. எங்கோ சுற்றிவிட்டு உள்ளே நுழைந்த என்னை வாஞ்ச்சையாக அழைத்து அருகில் அமர்த்திக்கொண்டு பேச ஆரம்பித்தார் அத்தை.

“இவனுக்கு மூணு வயசு இருக்கும் போது நாந்தான் இவனுக்கு ட்ரெஸ் பண்ணி விடுவேன். வேற யார்கிட்டயும் போகமாட்டான். எப்பிடி இருப்பான் தெரியுமா, மூக்கும் முழியும் சட சடயா முடியும் அப்பிடியே மயில்ரேக மாதிரி இருப்பான்” கண்கள் அனிச்சையாக அத்தை மகளைச் சுற்றியும் சுற்றி இருப்பவர்கள் மீதும் போகும்..கித்தாய்ப்புதான். பேசிக்கொண்டே போகும் அத்தை இப்படி முடிப்பார்..

“வெயில்ல சுத்தி சுத்தி இப்பத்தான் இப்பிடி குரங்கு மாதிரி ஆகிட்டான்”

அதற்குப் பிறகும் அங்கு இருக்க முடியும்??

**

வீட்டிற்கு சொந்தம் வருவது என்றவுடன் இதுவும் நினைவிற்கு வருகிறது. அப்பொழுதெல்லாம் யாராவது வீட்டிற்கு வந்தவுடன் கேட்கும் முதல் கேள்வி

“எப்போ ஊருக்குப் போவீங்க?” டேய்ய் அப்பிடில்லாம் கேட்கக் கூடாது என்று சவுண்டு வரும்.

அன்பு நிறைந்த கேள்வி அது. அதாவது கொஞ்ச நாளாவது இருப்பீர்கள்தானே என்பதை எப்படி கேட்க வேண்டும் என்று தெரியாமல் அப்படி விழும் கேள்வியது. மழலை எவ்வளவு அற்புதங்கள் நிறைந்தவை என்ற எண்ணம் இப்பொழுது வருமானால், காரணம் வேறொன்றும் இல்லை..அன்றாடங்களில் அவ்வ்வ்வளவு பிரச்சனைகளை சந்தித்துக்கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.

அவ்வளவே.

**

என்’ணங்கள் 05/01/11

புத்தகக் கண்காட்சி. சென்ற வருடம் கிட்டத்தட்ட ஒரு திருவிழா போலத்தான் கழிந்தது. பதிவர் சந்திப்புகள் அதிகம் நிகழ்ந்தன. இந்த ஆண்டும் அப்படியே நடக்கும் என்று நினைக்கிறேன். பதிவர்களையும் நண்பர்களையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. பார்ப்போம்.

**

சென்ற வாரம் முழுக்கவே விழாக்கள். எஸ்.ராவின் புத்தக வெளியீட்டு விழா கொஞ்சம் வித்தியாசமாக நடந்தது என்றே சொல்லலாம். ’நாவலைப் பற்றியக் கலந்துரையாடல்’ மருத்துவர் ருத்ரன், எஸ்ரா,யுவன் சந்திரசேகர், முருகேச பாண்டியன் மற்றும் மனுஷ்யபுத்ரன் ஆகியோர் கலந்து உரையாடினார்கள்.

மிக நன்றாக இருந்த அதில் எனக்குப் பிடித்த இரண்டு வரிகள்.

யுவன் : உண்மையச் சொல்ல வேண்டும் என்றால், நாவலை இன்னும் முழுதாகப் படிக்கவில்லை. நான்கு நாட்களுக்கு முன்புதான் புத்தகம் கையில் கிடைத்தது. இவ்வளவு உழைப்பைச் சிந்தி எழுதப்பட்ட இந்த நாவலை முழுதும் உணர்ந்து படிக்க நான்கு நாட்கள் போதாது.எனக்கு நிறைய டைம் எடுத்துப் படிக்க வேண்டும். பாதி தான் படித்திருக்கிறேன். படித்த வரை பகிர்வேன்.

அடுத்து மைக்கை வாங்கிய முருகேசபாண்டியன் : நாவல் கைல கிடைச்சதும் தடதடன்னு 12 மணிநேரத்துல படிச்சு முடிச்சுட்டேன். நடுவுல சில வேலைகள். இல்லேன்னா 6 மணிநேரத்துல படிச்சிருப்பேன்.

அருகருகில்..விதவிதம். அதில்தான் சுவாரஸ்யம் போல.

**

கேபிள் சங்கரின் புத்தகவெளியீட்டு விழா சிறப்பாக நடந்தது. நடிகர் மோகன் பாலு செமையாகப் பேசினார். கிட்டத்தட்ட கேபிள் கதைகளில் வரும் கேரக்டர்களாக மாறி உணர்வு எழுச்சியானார். ஆதி அப்துல்லா லக்கி நாகரீகம். பேராசிரியை பர்வீன் வழக்கம் போல்(வழமை என்ற வார்த்தை பிடிக்காது)அற்புதமான மொழியில் பேசினார். சுரேகா அற்புதமாய் தொகுத்து வழங்கினார். வாழ்த்துகள் கேபிள். மீண்டும்.

**

கொஞ்ச நாட்களாக எதுவும் சரியாக எழுதுவதில்லை என்பதை விட எழுதத் தோன்றுவதில்லை/முடிவதில்லை என்பதே சரி/உண்மை.

**

‘நான் உன்னயே இருவத்தி நாலுமணிநேரமும் நெனச்சுட்டு இருக்கேன். நீ அப்பிடி ஒரு நாளாவது நெனச்சு இருக்கியா?’

காதலி உபயோகித்த வார்த்தைகளில் அதிகம் இந்த வரிகளாக இருக்கக் கூடும்(வாங்குப்பெத்தவர்கள் சொல்லவும். )

இதைத்தான் அற்புதமாய் அப்பொழுதே இப்படி..

யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்.

என் நெஞ்சில் காதலர் எப்பொழுதும் இருப்பது போல அவர் நெஞ்சில் நான் இருக்கின்றேனா? என்பதாகப் பொருள். இதில் வரும் ஓஒ வார்த்தை ஏதோ செய்கிறது ஆனாலும் வார்த்தைப் ப்ரயோகத்திற்கான சரியான காரணம் எவரேனும் சொன்னால் மகிழ்ச்சியாய் இருக்கும். தமிழில் இப்படியான இன்பங்கள் இருப்பதால் அமுதென்று பெயர்.

**

ஈசன் படம். புதியபாதைக்குப் பிறகு பார்த்திபன் தொலைந்து போனதுபோல சசியும் ஆகிவிடுவாரோ என்ற லேசான ஒரு பயம் ஏற்பட்டதென்னவோ உண்மை. ஆனால் படம் பிடித்தே இருந்தது. சுப்ரமணியபுரத்திற்கு நேர் எதிராக சென்னை இளைஞர்கள் குறித்தும் இரவு வாழ்க்கை குறித்தும் காட்சிப்படுத்தியது நன்றாகவே இருந்தன. நகரத்து மக்களோடு கிராமத்து மக்கள் எதிர்கொள்ளும் ஆரம்பகால அக்கப்போர்களை காட்சிப்படுத்தியதும் பிடித்திருந்தது.

குறிப்பாக, முதல் பகுதியில் வரும் அரசியல். அமைச்சர்(லேசா முரசொலி மாறன் ஜாடை?!)& சன்(மகன்) செய்யும் அட்டூழியங்கள் அன்றாடத்தில் எப்படிப் பாடாய்படுத்துகிறது என்பதை ஜஸ்ட் லைக் தட்டாக ஆனால் அழுத்தமாகச் தட்டிச் சொன்னது அற்புதம். தைரியமும்.

இயக்குனராக சசி ஏமாற்றியதும் உண்மை. முதல்படத்தின் தரம் அப்படி.

சமுத்திரக்கனி கவர்ந்தார். சில விசயங்கள் பிடிப்பது போல இருக்கும். யோசித்துப் பார்த்தால் அதில் என்ன இருக்கிறது,பிடிக்க, நல்லா இல்லையோ என்ற எண்ணம் வரும். ஈசன் பிடித்திருந்தது. எண்ணமும் வந்தது.

**


காளியின்
ஆங்காரம் தணிக்க
வெண்ணெய் எறியச் சொன்னார்கள்
ஒவ்வொரு முறையும்
குறிதப்பியதில்
என் மேல் எனக்குச்சினம்

**

கருவறைக் கடவுளுக்கு
தட்டுத்தீ வெளிச்சம்
இங்கிருந்து பார்த்தால்
ஆராதனையில் சிலையும்
சுற்றி இருக்கும் இருளும்
சேர்ந்தே தெரிகிறது

**