உங்களுக்கு அக்கா இருக்கிறாரா? அதுவும் உங்களை விட ஒரு ஐந்து,ஆறு வருடம் வயதில் மூத்த அக்காவா.. நீங்கள் மிகவும் அதிர்ஷ்ட்டசாலி.ஆம்...
தனக்கு கிடைத்த பாசம்,முக்கியத்துவம் அனைத்தும் பாதியாக குறைந்தாலும்,தனக்கு பிறகு பிறந்த குழந்தையை,சொப்பு சாமன் வைத்து விளையாட்டுக் காட்டி,"அக்கா பாரு" என்று பேச்சு சொல்லிக்கொடுக்கும் இனம்புரியாத பாசம் முதல் கட்டம்.
அடுத்து, நமது வலது கன்னத்தில் கட்டை விரலையும் மற்ற விரல்களை இடதுகன்னத்திலும் அலுந்த பதிந்து பிடித்துக் கொண்டு,தலைமுடியை படிய வாரிவிட்டு,பவுடர் போட்டு, இடுப்பில் தூக்கிகொண்டு தெரு முழுதும் வலம் வருவது இரண்டாவது கட்ட பாசம்.
பள்ளிக்கூடத்தில் இருந்து வந்தவுடன் புத்தகப்பையை அதை வைக்கும் இடத்தில்(பெரும்பாலும் அக்காமார்கள் ஒரே இடத்தில் தான் வைப்பார்கள்..அண்ணனோ, நாமோ திண்ணையில் இருந்து சர்ர்ரென்று பெளலிங்(சென்னையில் ஸ்னோ பெளலிங்!)போல தள்ளிவிட்டு போவதுதான் வழக்கம்.)வைத்துவிட்டு,முதல் வேலையாக நம்மிடம் விளையாடுவதுதான் அவர்களின் தலையாய வேலை.
அடுத்த கட்டமாய் அக்கா படிக்கும் பள்ளிகூடத்திலேயே சேரும் வாய்ப்பு பெரும்பாலும் அமையும். இன்னாரின் தம்பி என்ற காரணத்திற்காக முதல் நாளில் இருந்தே கிளாஸ் டீச்சர் சற்று அதிக அன்யோன்யம் காட்டுவார்.பெருமையாக இருக்கும்.
ஆறாப்பு ஏழாப்பு வந்தவுடன் அக்கா, பத்தோ பண்ணிரெண்டாவதோ படிப்பவராக இருப்பார்/ள். நமக்கான மதிய உணவு அக்காவிடமே இருக்கும். அவளுடைய வகுப்பிற்கு சென்று சாப்பிட வேண்டும்.
அக்காவின் தோழிகள் வட்டமாக அமர்ந்து.. சாப்பிட்ட்டு முடித்தவுடன் அத்தனை அக்காவிடமும் "போய்ட்டுவரேன்க்கா" என்றவுடன்..
"ஜாமன்ட்ரிபாக்ஸ்" போன்ற டப்பாவை பல்லை வைத்து டப்பாவின் இருபக்கமும் ஒரு நெம்பு நெம்பி திறந்து(எளிதில் கையை வைத்து திறக்காலாம் என்றாலும் இப்படித்தான் திறப்பார்கள்)அதில் இருந்து ஒரு நெல்லிக்காய் எடுத்து தருவார்கள்..அந்த டப்பாவில் எட்டிப்பார்த்தால் நாலைந்து நெல்லிக்காய்கள் தட்டையாக இருக்கும்.
உருண்டையான நெல்லிக்காயை எப்படி,எங்கு கடிக்க ஆரம்பிப்பார்கள் என்றே தெரியாது..ஆனால் கடவாய் ஓரத்தில் வைத்து கரகரவென்று அரைத்து, மிக தட்டையாக,வட்ட வடிவில் ஒரு தேரின் சக்கரம் போல செய்து விடுவார்கள்.. எப்படித்தான் செய்கிறார்களோ?
அதுபோக அந்தந்த சீஸனுக்கு ஏற்ப,முட்டைக்காய்,நவ்வாப்பழம்,கொடிக்காய்,புளி உருண்டை என கிடைக்கும்.
அக்காவும் அவளின் தோழிகளும் ஒரே மாதிரி ரெட்டைஜடை(ரெட்ட ஜட ரேடியா கொட்டடிக்க வாரீயா..)தபால்பை(எண்ணெய் கறை)என செட்டு செட்டாக இருப்பார்கள்..
வீட்டுப்பாடம் செய்யவில்லை என முட்டிக்கால் போட்டாலோ,வேறு ஏதாவது சேட்டை செய்தாலோ, வீட்டிற்குள் நுழையும் பொழுதே அப்பாவிடம் சொல்லிக்கொடுத்து விடுவார்கள்..அப்பொழுது அது "கோள்மூட்டி"..பின்னாளில்,விபரம் தெரிந்த பின் தான் அது "அக்கறை" என்ற உண்மை புரியும்.இந்த கோள்மூட்டலுக்கு பயந்தே நிறைய தவறுகள் செய்யாமல் தவிர்த்துவிடும்படி ஆகிவிடும்.
இப்படியான பள்ளிப்பருவங்கள் முடிந்து லேசாகா மீசை அறும்பும் வயதில்.. அக்காவிடம் பேசுவது கொஞ்சமாக குறைந்துவிடும்..தெருவில் எவனாவது அக்காவை சைட் அடிக்கிறான் என்று தெரிந்தால் விடலை கேங்குடன் செட்டு சேர்ந்து அவனோடு சண்டைக்கு போய்விடுவதும் நடக்கும்.
அக்காவிற்கு கல்யாண பேச்சு ஆரம்பித்து,அது என்னமோ நமக்கு மிகப்பெரிய கடமை போல பாவித்து, நிச்சய நாளில் இருந்து கல்யாண நாள்வரை ஒரு மாதிரி கஞ்சி போட்ட மாதிரியே இங்கும் அங்கும் திரிந்து,கல்யாணத்தன்று மண்டபத்திற்குள் எதற்கெடுத்தாலும் வேகவேகமாய் நடந்து,பரபரப்பாய் அலைந்து, நண்பர்களுக்கு பீர் பார்ட்டி வைத்து.. அக்காவை புது மெத்தை சகிதம் வேனில் ஏற்றி அவர்களுடன் அனுப்பிவிட்டு..வீடடைந்ததும் அவள் இல்லாத வெறுமை உணரும் தருணம்.. ஒட்டு மொத்த நாட்களும் வந்து போகும் தருணம்..அதிலிருந்து மீண்டு வர சில நாட்கள் பிடிக்கும்.
எப்பொழுதும் ஏதாவது சண்டை அல்லது படிபடி போன்ற நச்சரிப்புகள் ஊடே இருந்த உறவு, அவளின் திருமணத்திற்கு பிறகு எப்பொழுதாவது வீட்டிற்கு வரும்பொழுது.."சன் டிவி எத்தனாவது சேனல்டா?" என்ற வினாவில் அவள் இப்பொழுது "விருந்தாளி" என புரியவைத்து விடும்..
எல்லாம் கடந்து, நமக்கு ஒரு வாரிசு பிறந்த உடன்,இழுத்து சொருகிய சேலையுடன் அத்தைகாப்பில் தொடங்குபவள்.. அதே கைகளால் வாரிசின் கன்னங்களில் அலுந்த பதிந்து படிய வாரி, பவுடர் அடித்து, இடுப்பில் தூக்கிக் கொண்டு
"உங்க அப்பனும் இப்படித்தான் இருப்பான்..இறங்கவே மாட்டான்"
என்று சொல்வதை.. நம் செவிகள் கேட்டும் கேட்காதது போல் இருந்தாலும், தனிச்சையாக நம் விழிகளில் கசியும் நீர் சொல்லிவிடும் மனதில் படிந்து கிடக்கும் பாசத்தை..
அக்கா...
..
அக்கா...
Posted by
narsim
Monday, February 2, 2009
Labels: உறவுகள்
71 comments:
அருமை
//அவளின் திருமணத்திற்கு பிறகு எப்பொழுதாவது வீட்டிற்கு வரும்பொழுது.."சன் டிவி எத்தனாவது சேனல்டா?" என்ற வினாவில் அவள் இப்பொழுது "விருந்தாளி" என புரியவைத்து விடும்..
//
வரவர உங்க வர்ணனை எங்கயோ போகுது பங்காளி. மிகவும் அருமையான (அன்பான?) கட்டுரை.
:)
super
//"ஜாமன்ட்ரிபாக்ஸ்" போன்ற டப்பாவை பல்லை வைத்து டப்பாவின் இருபக்கமும் ஒரு நெம்பு நெம்பி திறந்//
//"சன் டிவி எத்தனாவது சேனல்டா?" என்ற வினாவில் அவள் இப்பொழுது "விருந்தாளி" என புரியவைத்து விடும்..//
இவை வழக் கலக்..
ஆனால் பதிவு
வழக்கத்தை விட சூப்பர். நம் அனுபவங்கள் பதிவாக வரும்போது அதன் தாக்கம் அதிகம். அருமை தல..
கலக்கல் நர்சிம்.
எனக்குச் சகோதரிகள் இல்லையெனினும் மற்ற நண்பர்களின் சகோதரிகள் இவ்வாறுதான் நடந்து கொண்டனர்.
அருமை நர்சிம். உள்ளத்தில் உள்ளதை கண்ணாடி வைத்து பார்பது போல் உள்ளது.
உண்மையை சொல்வதென்றால் என் கண்களில் கண்ணீர்.
//எல்லாம் கடந்து, நமக்கு ஒரு வாரிசு பிறந்த உடன்,இழுத்து சொருகிய சேலையுடன் அத்தைகாப்பில் தொடங்குபவள்.. அதே கைகளால் வாரிசின் கன்னங்களில் அலுந்த பதிந்து படிய வாரி, பவுடர் அடித்து, இடுப்பில் தூக்கிக் கொண்டு
"உங்க அப்பனும் இப்படித்தான் இருப்பான்..இறங்கவே மாட்டான்"//
என்னை வளர்த்து ஆளாக்கியது போதாதென்று மூன்று மாதம் முன் பிறந்த என் பெண்ணை தினம் குளிப்பாட்டுவதும் அவரே, "பசிக்குது அத்தை" என்று என் மகன் சொன்னால், தான் சாப்பிட வைத்த ரசம் சாதத்தை கூட அவனுக்கு ஊட்டி விடும் என் அக்காவை என்னவென்று சொல்வது.
எனக்கு வாழ்க்கையில் சரியாக அமைந்த உறவென்றால் அது என் சகோதரிகள்தான்
(எனக்கு ஐந்து அக்காக்கள்)
உணர்ச்சிவசப்பட வைத்து விட்டீர்கள்
\\உங்க அப்பனும் இப்படித்தான் இருப்பான்..இறங்கவே மாட்டான்"
\\
\\ஒரு மாதிரி கஞ்சி போட்ட மாதிரியே இங்கும் அங்கும் திரிந்து,கல்யாணத்தன்று மண்டபத்திற்குள் எதற்கெடுத்தாலும் வேகவேகமாய் நடந்து,பரபரப்பாய் அலைந்து, நண்பர்களுக்கு பீர் பார்ட்டி வைத்து.. அக்காவை புது மெத்தை சகிதம் வேனில் ஏற்றி அவர்களுடன் அனுப்பிவிட்டு..வீடடைந்ததும் அவள் இல்லாத வெறுமை உணரும் தருணம்.. ஒட்டு மொத்த நாட்களும் வந்து போகும் தருணம்..அதிலிருந்து மீண்டு வர சில நாட்கள் பிடிக்கும்\\
தலைவரே நான் அனுபவித்தது
\\சன் டிவி எத்தனாவது சேனல்டா?" என்ற வினாவில் அவள் இப்பொழுது "விருந்தாளி" என புரியவைத்து விடும்\\
கண்ணீரை வரவழைத்து விட்டீர்கள்
மிகவும் அருமை தலைவரே!
(இங்கே எல்லாம் தமிழ வலைச்சு வலைச்சு எழுதுங்க போனில் இங்கிலிபுஸ்ஸ்ஸ்ஸ் பேசி என்னை டரியள் ஆக்குங்க:)))) அடுத்தமுறை நான் அரபி பேசி உங்களை டரியள் ஆக்குறேன்.
//ஆறாப்பு ஏழாப்பு வந்தவுடன் அக்கா, பத்தோ பண்ணிரெண்டாவதோ படிப்பவராக இருப்பார்/ள்.//
அது உங்க ஊரில அப்பு நம்ம ஊருல !
எல்லாம் அக்காவும் தம்பியும் ஒரே கிளாஸில் கூட படிப்பாங்க, தம்பிக்காக அக்கா ஒரே கிளாஸில் ரெண்டு டைம்ஸ் கூட வெயிட்டீங்:)
நல்ல அனுபவமிக்க பதிவு, அருமை
நல்லாருக்கு பதிவு! அட்டகாசம்!
//தலைமுடியை படிய வாரிவிட்டு,பவுடர் போட்டு, இடுப்பில் தூக்கிகொண்டு தெரு முழுதும் வலம் வருவது //
இப்படில்லாம் இல்லைன்னாலும் சேக்ஸ்-ல்லாம் போட்டு விட்டிருக்கேனே!
//அப்பொழுது அது "கோள்மூட்டி"..//
இதெல்லாம் கரெக்டா செஞ்சுருக்கேனே..:-)))
என் தம்பியுடனான நினைவுகளை மீட்டதற்கு நன்றி!
\\ஒரு நெல்லிக்காய் எடுத்து தருவார்கள்..அந்த டப்பாவில் எட்டிப்பார்த்தால் நாலைந்து நெல்லிக்காய்கள் தட்டையாக இருக்கும்.
உருண்டையான நெல்லிக்காயை எப்படி,எங்கு கடிக்க ஆரம்பிப்பார்கள் என்றே தெரியாது..ஆனால் கடவாய் ஓரத்தில் வைத்து கரகரவென்று அரைத்து, மிக தட்டையாக,வட்ட வடிவில் ஒரு தேரின் சக்கரம் போல செய்து விடுவார்கள்.. எப்படித்தான் செய்கிறார்களோ?
\\
அது அவர்களுக்கே உரித்தான கலை.
ரொம்ப நெகிழ்வான பதிவு !!
பிடித்த வரிகளை எடுத்து போட்டு எழுதலாம்னு நினைச்சேன்.. ஆனா முடியல.. எதை நல்ல வரிகள்னு சொல்றது.. நல்ல வரிகள்னு சொன்னா எங்க இது ஒரு சாதாரண கட்டுரையாடுமோன்னு கவலையாடுது.
மிக நெகிழ்வான பதிவு நர்சிம்.. கண்கள் பனித்தபடி
சங்கர்..
ஏ க்ளாஸ் பதிவு நர்சிம்... பதிவில் உள்ள அத்தனை விஷயங்களுமே நான் ஏக்கப்பட்டவை. ஹ்ம்ம் ஒரு அக்காவுக்காக அப்படி ஏங்கி இருக்கிறேன்.
ரொம்ப செண்டிங்க பதிவு. உங்க அக்கா மட்டுமில்லை எந்த அக்கா படிச்சாலும் ஃபீலாயிடுவாங்க.
வாவ், சூப்பர்ப்பா இருக்குங்க.
:)
நல்ல அனுபவமிக்க பதிவு..அருமை.
ஏகப்பட்ட தம்பிங்க கண்ணுல இன்னைக்கு கண்ணீர்ன்னு நினைக்கிறேன்... :)
அருமையான எழுத்துகள்.
தொடர்ந்து எழுதவும் ...
- பாலா
//வீடடைந்ததும் அவள் இல்லாத வெறுமை உணரும் தருணம்.. ஒட்டு மொத்த நாட்களும் வந்து போகும் தருணம்..அதிலிருந்து மீண்டு வர சில நாட்கள் பிடிக்கும்.//
அனுபவம்.
ம்ம்ம்ம் எதை எடுத்தாலும் நன்றாக எழுகின்றீர்கள். சுட்டிகாட்டினால் பதிவை விட பெரிய பின்னூட்டம் வரும்.
அருமை
அக்காவைப்பத்தி எழுதுனதும் துளசி டீச்சர் முதல்ல வந்துட்டாங்க பாருங்க. அவங்க அக்காவைப்பத்தி ஒரு சூப்பர் தொடரே போட்டிருந்தாங்க. தங்கச்சிங்களுக்கெல்லாம் இது மாதிரி ஒரு பதிவு கிடைக்காது பாருங்க. சூப்பர் பதிவு
நர்சிம்,
மிக அருமையான, நெகிழ்ச்சியான பதிவு. அக்கா இருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த நெகிழ்வு கட்டாயம் இருந்தே தீரும். ஆனாலும் அக்கா திருமணத்துக்குப் பின் நீங்கள் தப்பித்து விட்டதாகத் தெரிகிறது. எனக்கு... ஹம். இன்னமும் நான் மிகவும் பயப்படும் (வெளியில் மரியாதை என்றே சொல்வேன்) இரு பெண்களுள் அக்காவும் ஒருத்தி. ஹி ஹி
இந்த வருட ஆரம்பம் முதல் செம்ம பார்ம்ல இருக்கீங்க தல. வாழ்த்துகள்.
அனுஜன்யா
இந்த அனுபவமே எனக்கு இல்லாமல் போய்விட்டது, என் உடன் பிறந்த இருவரும் ஆண்கள்,
அடிக்கடி வருத்தபடுவதுண்டு ஏண்டா மூத்தவனா பிறந்தோம்னு!
உங்களை மாதிரி அண்ணன்கள் கிடைத்ததில் மகிழ்ச்சி
Nice post narsim!
// அதுவும் உங்களை விட ஒரு ஐந்து,ஆறு வருடம் வயதில் மூத்த அக்காவா.. நீங்கள் மிகவும் அதிர்ஷ்ட்டசாலி.ஆம்...//
இதுல கூட நிபந்தனைதானா...
!!
GUD one....
ஆனாலும் ரொம்ப சமத்து போல நீங்க
super
அருமை நர்சிம்.
\\வீட்டிற்கு வரும்பொழுது.."சன் டிவி எத்தனாவது சேனல்டா?" என்ற வினாவில் அவள் இப்பொழுது "விருந்தாளி" என புரியவைத்து விடும்..\\
சூப்பரோ சூப்பர்:)
Narsim,
Itz a good post about a great person... we just cant have anybody who can compensate this relationship... Great... keep going.
(could not type in tamil - sorry)
இப்படியான விசயங்களை சொல்ப்போனால் எவ்வளவு எழுதினாலும் திருப்தி இல்லாத தன்மைதான் இருக்கும் இல்லையா..அண்ணன் எனக்கு மூன்று பேர் இருந்தார்கள் மூன்று பேரும் மூன்றுரகமாய் பாசம் காட்டுபவர்கள்...
வால்பையன் said...
இந்த அனுபவமே எனக்கு இல்லாமல் போய்விட்டது, என் உடன் பிறந்த இருவரும் ஆண்கள்,
அடிக்கடி வருத்தபடுவதுண்டு ஏண்டா மூத்தவனா பிறந்தோம்னு!//
தம்பிங்களும் இப்படி நீங்க ஏன் அண்ணவாக பிறந்தீங்க என்று வருத்தப்பட்டுக்கிட்டு இருக்கபோறாங்க வால்!
//தம்பிங்களும் இப்படி நீங்க ஏன் அண்ணவாக பிறந்தீங்க என்று வருத்தப்பட்டுக்கிட்டு இருக்கபோறாங்க வால்! //
அதையும் என் தம்பியின் பிறந்தநாள் பதிவில் சொல்லியுள்ளேனே!
தம்பிகளுக்கு எப்போதுமே அன்ணங்கள் பைத்தியகாரர்கள் தான்
எல்லா நேரங்களிலும்--- வாழ்கை வாழ்வதற்கே,
உயர்ந்த உறவுகளை
உள்ளார்ந்த உணர்வுகளை
நினைத்து, நினைத்து உருகி
நெகிழ்ந்து மகிழ்ந்து ரசித்தால் ....
( நல்ல ரசிகன்)
alakoo alaku aanantha alaku!
தல நமக்குலாம் தங்கச்சி செண்டிமென்ட்தான்..
அக்காவை அறியாததால்.. பதிவு என்னை ஏனோ பாதிக்கவில்லை... பதிவின் வலிமையையும் உணரமுடியவில்லை..
உங்கள் வர்ணனைகளை படிக்க படிக்க பொறாமையாக இருக்கிறது நண்பா..
ஏன்யா இப்படி எழுதறனு கேக்கனும் போல இருக்கு..
//எப்பொழுதும் ஏதாவது சண்டை அல்லது படிபடி போன்ற நச்சரிப்புகள் ஊடே இருந்த உறவு, அவளின் திருமணத்திற்கு பிறகு எப்பொழுதாவது வீட்டிற்கு வரும்பொழுது.."சன் டிவி எத்தனாவது சேனல்டா?" என்ற வினாவில் அவள் இப்பொழுது "விருந்தாளி" என புரியவைத்து விடும்..//
பொளேர்ன்னு அறைஞ்ச மாதிரி ஒரு ஃபீலிங்க்....
//சன் டிவி எத்தனாவது சேனல்டா?" என்ற வினாவில் அவள் இப்பொழுது "விருந்தாளி" என புரியவைத்து விடும்//
பளீர்
very nice.............
ம்ஹூம் சொல்ல வார்த்தையே இல்ல...எனக்கும் அக்கா உண்டு இதுல போல இல்லை என்றாலும் கடைசி அந்த விருந்தாளின்னு சொன்னிங்க பாருங்க அதை படிக்கும் போதே திக்குன்னு ஆகிடுச்சி!
நமக்கும் பழைசை எல்லாம் கிண்டிவிட்டுட்டிங்க தல..;)
படிக்க ஆரம்பிக்கும் போது என் மகள் புத்தகப்பையைப் போட்டுவிட்டு தம்பியுடன் விளையாடும் காட்சி மனதில் வந்தது. ( நான் செய்தனான்னு ஞாபகம் இல்லை) கொஞ்சம்கொஞ்சமாக மேலே படிச்சு சேனல் இருக்கும் இடம் வருவதற்குள் என் தம்பி நினைவுக்கு வந்து ( அவன் இப்ப ரொம்ப தூரமா ஊருல இருக்கான்) சேனல் பத்தி படிக்கற இடம் வந்ததும் கண்ணீர் கட்டி தொண்டை அடைச்சிடுச்சு..
உணர்வுகளும்,உண்மையும் அனுபவங்களும் ஒரு புள்ளியில் சேர்ந்து அமையும் எழுத்துக்கள் எல்லோர் மனதிலும் படிந்து போகிறது என்பதை பின்னூட்டங்கள் மூலம் உணர்கிறேன்.. எல்லா வித உணர்ச்சிகளையும் பின்னூட்டங்களை பார்க்கும்பொழுது அடைந்தேன்..
பங்கிட்ட அனைவருக்கும் நன்றி..
என்ன சொல்றதுன்னே தெரியல நர்சிம் சார்.
உங்க பதிவ படிச்சவுடனே எனக்கு அழுகை தான் வருது.
அக்காஆ - இன்னொரு அம்மா.
எப்பொழுதும் ஏதாவது சண்டை அல்லது படிபடி போன்ற நச்சரிப்புகள் ஊடே இருந்த உறவு, அவளின் திருமணத்திற்கு பிறகு எப்பொழுதாவது வீட்டிற்கு வரும்பொழுது.."சன் டிவி எத்தனாவது சேனல்டா?" என்ற வினாவில் அவள் இப்பொழுது "விருந்தாளி" என புரியவைத்து விடும்..
மிகவும் நுட்பமான உதாரணம்.
முதல் தடவை உங்கபதிவை படிக்கறேன்.
எனக்கும் என் தம்பிக்கும் இடையே நடந்தவைகளை யாரோ எங்களுக்குத் தெரியாமல் வீடியோ எடுத்து போட்டது போல் இருக்கிறது.
பாராட்டுக்கள்.
இந்தப் பதிவைப் படிக்கலன்னு சொன்னதும் திட்டித் தீர்த்துட்டாரு ரமேஷண்ணன்...
அவரோட கோவம் ஏன்னு பதிவைப் படிச்சப்பதான் தெரிஞ்சது..
அருமையா எழுதியிருக்கீங்க பாஸ்!!!
செம....
அண்ணே... மெயில் ஐடி கேட்டேனே???
// துளசி கோபால் said...
அருமை//
repeatuuuuuuuu... :))
அக்காவ பத்தி மட்டும் தான் எழுதுவீங்களா?? இந்த தங்கைப் பத்தி எல்லாம் எழுதமாட்டீங்களா?? ;)) உங்க ஸ்டைல்ல அப்படி ஒரு பதிவ எதிர்ப்பார்க்கிறேன் அண்ணா..
நன்றி அ.அம்மா,பரிசல்,இராம்,தங்கச்சி.. லை இல்லையா?
//லை இல்லையா?//
Puriyala anna :|
யோசிங்க, அப்பிடியும் ம்ஹீம்னா மெயிலுங்க..
உங்கள் வலைப்பக்கத்துக்கு முதன் முறையாக வருகிறேன்! (என் பதிவில் உங்கள் நறுக்கென்ற பின்னூட்டத்தைப் பார்த்து ஈர்க்கப்பட்டு)
மிகவும் பெருமையாக இருக்கிறது இப்படி ஒரு அற்புதமான எழுத்தாளர் என் பதிவைப் படித்து பாராட்டியதற்கு. எனக்கும் கண்களில் நீர் வந்தது உங்கள் பதிவைப் படித்து. நான் சொல நினைத்ததையெல்லாம் எற்கனவே 53 பெர் சொலி விட்டார்கள்.
என் அக்கா எனக்கு இன்னொரு அம்மா போலவே தான். என்னை விட 13 வயது மூத்தவர். ஆனால் இப்போது வயது வளர்ந்ததும் எனக்கு நல்ல தோழியாகி விட்டார். நான் தம்பியாக இல்லாமல் தங்கையாக இருப்பதன் அதிர்ஷ்டம் அது!
/வடகரை வேலன் said...
கலக்கல் நர்சிம்.
எனக்குச் சகோதரிகள் இல்லையெனினும் மற்ற நண்பர்களின் சகோதரிகள் இவ்வாறுதான் நடந்து கொண்டனர்./
ரிப்பீட்டு..!
/நந்து f/o நிலா said...
ஏ க்ளாஸ் பதிவு நர்சிம்... பதிவில் உள்ள அத்தனை விஷயங்களுமே நான் ஏக்கப்பட்டவை. ஹ்ம்ம் ஒரு அக்காவுக்காக அப்படி ஏங்கி இருக்கிறேன்.
ரொம்ப செண்டிங்க பதிவு. உங்க அக்கா மட்டுமில்லை எந்த அக்கா படிச்சாலும் ஃபீலாயிடுவாங்க./
இதுக்கும் ஒரு ரிப்பீட்டு...:)
உங்கள் பதிவை படிக்கும் பொழுது எழுத்துக்கள் மறைந்து காட்சிகள் விரிகிறது. எழுத்துக்கள் மறைந்து உணர்வுகள் தெளிகிறது.
இயல்பான விஷயத்தை
இயல்புக்கு மேலாக (Extraordinary) எழுதும் எழுத்தாளாராக உங்களை காண்கிறேன்.
நன்றி நிஜமா நல்லவன்( நிஜமாவேவா தல?)
நன்றி தீபா
நன்றி ஸ்வாமிகள்
உங்களின் மிக முக்கியமான பதிவுகளில் ஒன்றாக நான் இதை கருதுகிறேன். எனக்கு அக்கா இல்லை எனினும் அத்தனையையும் கிராமங்களில் கண்டுணர்ந்த முந்தைய நினைவுகளோடு ஒரு உணர்வுவசப்பட்ட நிலையில் படித்தேன். ஒரே தங்கையிடம் முதல் நாளின் கடைசி நிமிடத்தில் சிரித்தமுகமாக விடைபெற்றாலும் வீட்டுக்கு வந்தபின்னர் பத்துமணிக்கு படுக்கும் நேரத்தில் அவள் இல்லாத வெறுமையை உணர்ந்து கண்ணீர் முட்ட நண்பர்களைப் பார்க்கப்போவது போல வெளியேறி இருண்ட தெருவினில் விம்மி அழுத நாள் நினைவில் வந்துபோனது. அவளை விருந்தாளியாக உணரும் நேரம் வாழ்வின் துயரமான கணங்களில் ஒன்று. வையத்தை வாழ்வாங்கு வாழச்செய்ய வந்தவர்கள் அவர்கள். அந்தப்பிரிவிலிருந்து நம்மை காலம் தேற்றும்..
எனக்கு அக்கா இல்லை.. அனால் நான் மிகவும் ஏங்கியது உண்டு.. கொடுத்து வைத்த தம்பிகள்..
நல்ல பதிவு. நன்றி
//
நமது வலது கன்னத்தில் கட்டை விரலையும் மற்ற விரல்களை இடதுகன்னத்திலும் அலுந்த பதிந்து பிடித்துக் கொண்டு,தலைமுடியை படிய வாரிவிட்டு,பவுடர் போட்டு
//
சான்ஸே இல்லை நர்சிம்.. அசத்துறீங்க..
எனக்கு உடன் பிறந்த அக்கா யாரும் கிடையாது
நானும் இது எல்லாம் எனக்கு கிடைக்காமல் போய் விட்டது என்று பல முறை நினைத்து உள்ளேன் . இந்த பதிவு என்னை மீண்டும் ஒரு முறை என் வருத்தங்களை எழுப்பி உள்ளது
அனுபவித்து எழுதி உள்ளீர்கள் .
சுட்டி தந்த தென்றலுக்கு நன்றி. எனக்கும் தம்பிக்கு 9 வயது வித்தியாசம். [என் இரு தங்கைகளின் சாப்பாடும் கூட என்னுடன்தான் சில வருடங்கள்]. தம்பி பள்ளி சேர்ந்த போதும் அப்படியே. எனக்கே மறந்த பல சின்ன சின்ன விஷயங்களை அவனுக்குத் திருமணமான பின் அவன் மனைவி வந்து ஒவ்வொன்றாக சொன்னபோது நெகிழ்ந்துதான் போனேன். இப்போ அவன் மகன் அவனைப் போலவே. முதன் முதலில் குழந்தையைக் கையில் வாங்கும் போது அவனைத் தூக்கியது போலவே உணர்ந்தேன். அத்தைக் காப்புக்கு ரெடியாகி விட்டேன்:)!
நல்ல பதிவு நர்சிம். பலரது நினைவுகளைக் கிளப்பி விட்டிருப்பதும் தெரிகிறது.
சொல்ல விட்டுப் போயிற்றே:)! இந்த ‘கோள்மூட்டி’ பட்டம் எனக்கும் உண்டு அப்போ தங்கைகளும் சேர்ந்து வைத்தது ‘கோழி’ என:)))!
வலைச்சரத்தின் மூலம் பழைய பதிவுகளின் அறிமுகம் கிடைத்தது,நன்றி..
மீண்டும் அனுபவத்தின் எழுத்து...மீண்டும் எழுத்தின் அனுபவ உன்னதம்..
அலுந்த பதிந்து - அழுந்தப் பதிந்து
ரொம்ப நல்ல இருக்குங்க....கடைசி வரிகள் படிக்கும் பொது புல்லரிக்குது
யதார்த்தமான உண்மைகள்...எனக்கு இப்போவே எங்க அக்காவை பார்க்கணும் போல இருக்கு
Heat touching post Narsim.
அப்படியே ரியல் லைஃபை சொல்லிருக்கீங்க. என் தங்கை இதைப் படித்தால் உங்களைப் போல அவளுக்கும் கண்ணில் நீர் வரலாம். எனக்கு வந்து விட்டது.
ரொம்ப அழகான எழுத்து நர்சிம்.
கண்களை கலங்க வைத்து விட்டீர்களா நண்பா
கண்களை கலங்க வைத்து விட்டீர்களா நண்பா
எனக்கும் ஒரு அக்கா இல்லையே என்ற ஏக்கத்தை அதிகப்படுத்திவிட்டீர்கள்.
அழகு!
Post a Comment