கம்பர்...சினிமா பாடல்கள்...சீதையழகு..சந்தம்...

டி.ராஜேந்தர் என்ற பெயரை கேட்டதும் இதழோரம் ஒரு புன்முறுவலும் அவரின் தாடியும் அதை கோதிவிட்டுக்கொண்டே ‘தங்கச்சி..’ என்று அவர் சிலுப்பும் வார்த்தையும் நினைவில் அரை நொடி ஃப்ளாஸாக வந்து போய்விடுகிறது. என்றாலும் அவரின் மொழிவளம்(தமிழ் எம்.ஏ)மிகவும் ஆழமானது.

வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
புதுமுகமான மலர்களே நீங்கள்
நதிதனில் ஆடி கவி பல பாடி
அசைந்து அசைந்து ஆடுங்கள்

என்று ரயில் பயணங்களில் படத்தில் அவரின் வார்த்தைகள் புருவமுயர்த்த வைத்தது அனைவரையும்..

அவள் மைவிழிக் குளத்தில்
தவழ்வது மீனினமோ
கவி கண்டிட மணத்தில் கமழ்வது
தமிழினமோ

செம்மாந்த மலர்கள்
அண்ணாந்து பார்க்கும்
உன் காந்த விழிகள்
ஒரு ஏகாந்த ராகம்
தெம்மாங்கில் பாட
ஏதேதோ குயில்கள்

என்று அடுத்தடுத்த வரிகளில் ரைமிங்கோடான வர்ணனைகள் மிக அற்புதமாய் இருக்கும்.அதுவும் மலரையும் மீனையும்,குயிலையும் உவமைகளாக ஒப்பிட்டு அழகை பாடியது ரசிக்கப்பட்டது.

“அன்ன நடை..பின்னலிடை..’ என அவ்வப்பொழுது பிற உயிரினங்களை ஒப்பிட்டு,ஒரு காதலனின் பார்வையில் காதலியை வர்ணிப்பதாக இது ஆண்டாண்டு காலமாய் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

லில்லி மலருக்கு கொண்டாட்டம் உன்னைப் பார்க்கையிலே...என எம்ஜியார் உதட்டை சுழித்து,கடித்து பாடும் பொழுது மஞ்சுளா வெட்கப்படுவதை விட லில்லி மலர் வெட்கப்படுவது போல தோற்றத்தை ஏற்படுத்திய வரிகள்..

மாஞ்சோலைக் கிளிதானோ,மான் தானோ வேப்பம் தோப்புக் குயிலும் நீதானோ..என பாடலாசிரியரின்(முத்துலிங்கம்) கற்பனையில் அனைத்து ஜீவராசிகளையும் காதலியுடன் ஒப்பிடப்பட்ட பாடலும் அந்த வகையே.

நவீன வாழ்க்கைக்கு ஏற்ப.. இந்த ஒப்பிடல் மாறிக்கொண்டே வந்து..

டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா
மெல்போர்ன் மலரின் மெல்லிய மகளா

என ஒப்பீடுகள் காலத்தோடு ஒத்து பயணித்துக்கொண்டே இருக்கிறது.

இது இன்று நேற்றல்ல..சங்க காலத்தில் ஆரம்பித்து வைக்கப் பட்ட பழக்கமாகவே படுகிறது.

இதோ சீதையின் அழகை கம்பரின் வரிகள் சொல்லும் இந்தப் பாடல் அதற்கு ஒரு சான்று.

விளக்கம்.


மெல்லிய இடையைக் கண்ட வஞ்சிக்கொடியானது வெட்கப்பட்டு ஒதுங்கிக்கொள்ள,நடையழகைப் பார்த்ததும் அன்னப்பறவைகள் பயந்து ஒதுங்கிக்கொள்ள,கால்களைப் பார்த்து வெட்கி தாமரை நீருக்குள் மறைந்து கொள்ள,கண்களைக் கண்ட மீன்கள் ஓட,பஞ்சை விட மென்மையான பாதங்களை உடைய சீதை நீராடினாள்.

பாடலின் சிறப்பு

சீதை நீராடும் அழகை வர்ணிக்கும் பாடல் என்பதனால், தண்ணீரில் காணப்படும் வஞ்சிக்கொடி,அன்னம்,தாமரை,மீன்கள் போன்றவற்றை மட்டுமே பாடுபொருளாக எடுத்தாண்டதே கம்பரின் சிறப்பு.அவையனைத்தும் சீதையின் அழகைப் பார்த்து தோல்வியடைந்ததாக அற்புதமான கற்பனையாக கையாண்டது.

பாடல்.

வஞ்சி நாண இடைக்கு, மடநடைக்கு
அஞ்சி அன்னம் ஒதுங்க, அடியன்ன
கஞ்சம் நீரில் ஒளிப்பக் கயலுகப்
பஞ்சி மெல்லடிப் பாவையும் ஆடினாள்


அற்புதம்.


..

42 comments:

Vidhoosh July 18, 2009 2:40 PM  

:) என்ன இருந்தாலும், கம்பனை படிக்கக் கூட டீஆர் கொக்கியை போட்டு இழுக்க வேண்டி இருக்கிறது பாருங்கள்.

என்னைத்தான் சொல்கிறேன், அட என்ன நரசிம் டீ.ஆர் பற்றி எதோ எழுதிருக்காறேன்னு பாத்தேன்.

என்ன?? உங்களால் மட்டுமே டீஆரையும் கம்பரையும் ஒரே சபையில் பேச வைக்க முடியும்.

வாழ்க வீராச்சாமி புகழ்.

வெங்கிராஜா July 18, 2009 2:44 PM  

மீ த பர்ஸ்டேய்!

ஜீவன் July 18, 2009 2:47 PM  

பதிவு அருமை நர்சிம்!

''தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறி தாமரைப் பூ மீது விழுந்தனவோ இதைக் கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில் ..படைத்திட்ட பாகம்தான் உன் கண்களோ!''

T. ராஜேந்தரின் இந்த வரிகள் நினைவுக்கு வருகிறது!!!

அ.மு.செய்யது July 18, 2009 2:54 PM  

பாடல் வரிகளை எப்படி ஞாபகம் வைத்து எழுதுகிறீர்கள் ??

இவ்வளவு துல்லியமாக வந்திருக்கிறது..

அத்திரி July 18, 2009 2:54 PM  

சகா அருமை வழக்கம் போல்

வடகரை வேலன் July 18, 2009 3:07 PM  

பதிவின் கடைசி வரி(வார்த்தை)யை எனது பின்னுட்டமாகக் கொள்.

Sure July 18, 2009 3:28 PM  

Arumai

பரிசல்காரன் July 18, 2009 3:52 PM  

நர்சிம்

ம்ம்ம்!

நீங்கள் குறிப்பிட்டிருந்த பல பாடல்களை பாடிக்கொண்டே படித்தேன். அருமை!

aravind July 18, 2009 3:59 PM  

super thala

back with full form

Nawas July 18, 2009 4:03 PM  

seethaiyai kambar partha madhiri ezhudiyirukkarr......

thamizharvam valarum ungalal...

nice work..

டக்ளஸ்... July 18, 2009 4:26 PM  

"இடைய்ல் இறைவனும் ஒன்றுதான்..
ரெண்டும் இருந்தும் தெரிவதே இல்லை.."

ரைட்டு தலைவரே..!

ஸ்ரீ.... July 18, 2009 4:29 PM  

நர்சிம்,

கம்பர்- சினிமாப் பாடல்கள் ஒப்பீடு அபாரம். தொடருங்கள்.

ஸ்ரீ....

பாசகி July 18, 2009 4:39 PM  

பதிவின் கடைசி வரியை வழிமொழிகிறேன் :)

D.R.Ashok July 18, 2009 4:57 PM  

சபாஷ்

நாடோடி இலக்கியன் July 18, 2009 6:22 PM  

அருமை நர்சிம்,
இதுவரை சொல்லியிருந்தப் பாடல்களிலேயே விளக்கம் தராமால் கம்பனின் வரிகள் நேரடியாகவே ஓரளவிற்கு புரிகிறது,ஒரு வேளை உங்க தொடர் பதிவுகளை வாசிப்பதால் நானும் இலக்கிய அறிவு பெற்றுவிட்டேனோ.(ஹி ஹி)

சில ஆண்டுகளுக்கு முன்பு விகடனில் கவிஞர்களைப் பற்றிய ஒரு தொடர் வெளிவந்துக் கொண்டிருந்தது. அப்போது டீ.ஆரை பற்றியும் ஒரு கட்டுரை வந்திருந்தது.
//தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறி தாமரைப் பூ மீது விழுந்தனவோ,
இதைக் கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில் படைத்திட்ட பாகம்தான் உன் கண்களோ//
இந்த பாடலைக் குறிப்பிட்டு கம்பனுக்கு மிக அருகில் நெருங்கியிருக்கிறார் இந்த இளைஞர் என்று டீ.ஆரை அப்பாடல் வெளியான நேரத்தில் பத்திரிகைகளில் பாராட்டியதாக எழுதியிருந்தார்கள்.

"கற்பனைக் கொட்டிக் குவித்து இங்கே அந்தக் கம்பனை வம்புக்கிழுப்பேன்" என்ற வாலியின் வரிகள் இங்கே ஞாபகத்திற்கு வருகிறது.

T.V.Radhakrishnan July 18, 2009 6:34 PM  

தண்ணீரில் மீன் அழுதால்
அதன் கண்ணீரை யார் அறிவார்
இப்பாடல் வரிகளும் டி.ராஜேந்தருடையது.

புருனோ Bruno July 18, 2009 6:46 PM  

தமிழின் சிறந்த பாடலாசிரியர்களில் டி.ஆரும் ஒருவர் என்பது பலர் அறியாதது

நீங்கள் பதிவு செய்திருக்கிறீர்கள்

--

எம்.எம்.அப்துல்லா July 18, 2009 9:37 PM  

பரிசல்காரன் said...
நர்சிம்

ம்ம்ம்!

நீங்கள் குறிப்பிட்டிருந்த பல பாடல்களை பாடிக்கொண்டே படித்தேன். அருமை!

//

மக்கள நான் ஒருத்தன் கொல்றது பத்தாதா???

நர்சிம் July 18, 2009 9:42 PM  

நன்றி விதூஷ்,வாழ்க அவர் புகழ்.

நன்றி வெங்கி ராஜா..

நன்றி ஜீவன்..நாடோடி இலக்கியனும் அந்த வரிகளை சொல்லி இருக்கிறார் பாருங்கள்.

நன்றி அ.மு.செய்யது. மறக்கக்கூடிய வரிகளா இவைகள்?லேசாக தோளைத் தட்டி விட்டால் இன்றும் நிறையப் பேர் “தேரா மன்னா செப்புவதுடையேனை” முழுதும் சொல்வது மாதிரிதான் செய்யது...

நன்றி அத்திரி சகா

நன்றி வேலன் அண்ணாச்சி.

நன்றி sure,

நன்றி பரிசல்..

நன்றி அரவிந்த்.(ஆமா தல)

நன்றி நவாஸ்

நன்றி டக்ளஸ்..சூப்பர் வரிகளவை.

நன்றி ஸ்ரீ.

நன்றி பாசகி

நன்றி அசோக்.(கொஞ்சம் பழைய மேட்டர்னா உங்களுக்கு ரொம்ப பிடிக்குது தலை..கரெக்ட்டா?)

நன்றி நாடோடி இலக்கியன்..சூப்பரா எழுதுறீங்க தல உங்க பதிவுகள்.. எழுதுறேன் அதைப் பற்றி.

நன்றி டிவிஆர் ஸார்.

ஆம் மருத்துவர் புருனோ..மிக நல்ல பாடலாசிரியர். நன்றி தலைவரே.

அனைவருக்கும் நன்றி.

நர்சிம் July 18, 2009 9:45 PM  

வாங்கண்ணே...

மங்களூர் சிவா July 18, 2009 10:15 PM  

அற்புதம்.

ஜ்யோவ்ராம் சுந்தர் July 18, 2009 10:30 PM  

கொஞ்சம் வேறு மாதிரி எழுதியிருக்கிறீர்கள் - சாதாரணமாக ஒரு நிகழ்கால சம்பவத்தை எழுதி அதனுடன் தொடர்பு படுத்துவதுபோல பழந்தமிழ் இலக்கியக் கவிதைகளைக் கொடுப்பீர்கள் :)

கம்பனின் கவிதை அழகு என்று சொல்ல நான் யார்? அதனால், நீங்கள் விளக்கியிருக்கும் விதம் அழகு என்று சொல்கிறேன்.

வெண்பூ July 18, 2009 10:31 PM  

கம்பரோட பாடல் தெளிவா புரியுது... விளக்கம் சூப்பர்..

ஆதிமூலகிருஷ்ணன் July 18, 2009 10:43 PM  

வடகரை வேலன் said...
பதிவின் கடைசி வரி(வார்த்தை)யை எனது பின்னுட்டமாகக் கொள்//

..ளுங்கள்.!

TBCD July 18, 2009 11:10 PM  

//ரைமிங்குகோடான வர்ணனைகள்//

கம்பர் காலத்தில் ரைமிங்க் இருந்திருக்க நியாயமில்லை..குறைந்தப்பட்சம் தமிழகத்தில்..

எதுகை மோனை கண்டிப்பாக இருந்திருக்கும்

:)))

இராகவன் நைஜிரியா July 18, 2009 11:16 PM  

டி. ஆர் அவரிகளில் பாடல் வரிகள் அற்புதமானவை. அவர் சினிமாவில் நடிக்க வராமல் பாட்டும், டைரக்‌ஷனும் மட்டும் செயுதிருந்தால் இன்னும் அருமையான பல படங்களும், பாடல்களும் நமக்கு கிடைத்து இருக்கும்.

வந்தியத்தேவன் July 18, 2009 11:54 PM  

கம்பனைப்போல புகழேந்திப் புலவர் தமயந்தியை இவ்வாறு வர்ணிக்கிறார்.

என்றும் நுடங்கும் இடையென்ப வேழுலகும்
நின்ற கவிகை நிழல் வேந்தே ‍ ஒன்றி
அறுகாற் சிறுபறவை யஞ்சிறகால் வீசும்
சிறுகாற்றுக் காற்றாது தேய்ந்து

அறுகாற் பறவை என இங்கே அவர் வண்டைக்கூறுகின்றார். ஒரு சிறிய வண்டின் சிறகால் வரும் காற்றினால தமயந்தியின் இடை ஆடியசையும் என்கிறார். எப்படியான மெல்லிடையாக அந்த இடையிருக்கவேண்டும். நல்ல காலம் புகழேந்தி இன்றில்லை..

இதே போல் நம்ம தலை டீஆரும் அருமையான பாடல்களை அந்த நாளில் கொடுத்திருப்பார்.

யாத்ரா July 19, 2009 1:02 AM  

அருமையான பகிர்வு, ஒரு காலத்தில் நான் பயங்கரமான டி ஆர் விசிறி :)

HVL July 19, 2009 6:21 AM  

அழகான ஒப்பீடு!

Cable Sankar July 19, 2009 9:41 AM  

அருமையான பதிவு.. தலைவரே..

பட்டிக்காட்டான்.. July 19, 2009 2:04 PM  

நல்ல ஒப்பீடு நர்சிம்..

ராஜா | KVR July 19, 2009 2:10 PM  

அருமையா எழுதி இருக்கிங்க நர்சிம்

D.R.Ashok July 19, 2009 3:03 PM  

எப்பா சரியான மெமரிப்பா உங்களுக்கு...u r 100% rite?

சங்கயிலக்கிய பாடல்களை நீங்கள் குறிப்பிடும்போது பின்ணோட்டத்தில் கண்டிப்பா நான் ஆஜார்..

நீங்களும் அதில் வெளுத்து வாங்குகிறீகள்.

உயிரோடை July 19, 2009 6:05 PM  

அற்புதம்.

நல்ல பகிர்வு நர்சிம்.

நையாண்டி நைனா July 20, 2009 2:30 PM  

உட்டாலக்கடி ரெடி.

தங்கள் கண்ணசைவிற்க்காக.......

தண்டோரா July 20, 2009 3:27 PM  

//கமழ்வது
தமிழினமோ//

நர்சிம்....”தமிழ்மணமோ’ என்று நினக்கிறேன்.இடுகையை இணைக்காததால் தமிழ் மணத்தை மறந்து விட்டீர்களா?

அனுஜன்யா July 20, 2009 4:11 PM  

இதத் தான்; இதத் தான்;

Welcome Back.

அனுஜன்யா

நர்சிம் July 20, 2009 5:54 PM  

அனைவருக்கும் நன்றி.

@தண்டோரா.. ரசித்தேன் தலைவா.. மாத்திடுறேன்..

@நையாண்டி நைனா..பட்டய கிளப்புங்க..வந்து பார்க்குறேன்

மணிப்பக்கம் July 21, 2009 12:31 PM  

அன்பு நண்பா, கொஞ்சநாள் வேலையில் இந்த பக்கம் வரவே இல்லை! என்னனென்னவோ நடந்து இருக்கிறது, நிறைய பதிவுகள் நீக்கம்... சரி!

டி.ரா முன்பு எழுதிய பாடல்களுக்கு ஈடு இணை கிடையாது .... அழகிய அலுக்காத வரிகள்...!

என்றும் தங்களை படித்து ரசித்து கொண்டிருக்கும்.... ;)

குசும்பன் July 23, 2009 11:17 AM  

இதை எல்லாம் ஒரு புத்தகமாக போடலாம்!

r.selvakkumar July 29, 2009 11:32 AM  

பின்னூட்டங்களுடன் சேர்த்துப் படிக்கும்போது இன்னும் நன்றாக இருக்கிறது இந்தப் பதிவு.

யோகன் பாரிஸ்(Johan-Paris) August 7, 2009 4:45 PM  

/முகிலினங்கள் அலைகிறதே!
முகவரிகள் தொலைந்தனவோ?
முகவரிகள் தொலைந்ததனால், அழுதிடுமோ?
அது மழையோ?/
ரி.ஆர் இன் தற்குறிப்பேற்ற அணிக்கு உதாரணமான மிக அழகான
வர்ணனை.
அருமையான கட்டுரை