என்’ணங்கள் 07/09/2010

இரவில் மீண்டுமொரு நீண்ட பயணம்.பேருந்தினுள் இளமூதா நிற மிளிரல்களில் பெண்கள் ஆண்கள் வயதானவர்கள் என பேதமின்றி குறுஞ்செய்திகளைப் புறம் தள்ளி,உள்ளிழுத்துக் கொண்டிருந்தார்கள்.பேருந்திற்கு வெளியே இரவு வழிந்து கொண்டிருந்தது. ஜெயமோகன் இரவு குறித்து ஒரு இடத்தில், இரவின் நிசப்தம் தேன் சொட்டுவதற்கு நிகராக இருப்பதாகச் சொல்லி இருப்பார்.அப்படித்தான் இருந்தது.தேனின் அடர்த்தியில், தேனின் சுவையில் சொட்டுச் சொட்டாகத்தான் என்னுள் இறங்கி,பின்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.இரவின் அடர்த்தி என்பதெல்லாம் முதல் கொஞ்ச நேரம்தான்.கண்களுக்குப் பழகிய பின்னர் இரவின் ஒவ்வொரு துளியையும் பார்க்க முடிந்தது. உணரவும்.வழிமறித்த டோல்கேட்கள் உமிழ்ந்த ஒளிக்கற்றைகள் அவ்வப்பொழுது நிசப்தத்தை கிழித்தன.ஆனால் ஒலிகளேதும் செய்துவிடவில்லை இரவின் நிசப்தத்தை. கருப்பு நிறத்தில் பெருங்கடலாய் ஊர்ந்து,உடன் வருவது போல இருந்தது. சிறு ஒலிகள் எல்லாம் அதில் கரைந்த பெருங்காயங்களே.
இரவை வாழ வேண்டும் என்ற எண்ணம் மீண்டுமொருமுறை வந்தபொழுது மதுரையும் வந்திருந்தது.

அதிகாலை மதுரையும் நடுஇரவு மதுரையும், மதுரை.

இறங்கியவுடன் ஆட்டோக்காரரிடம் பேரம் பேசினால் படியவில்லை. ’டீசல் விக்கிற விலைல, நைட் ரேட்டு’, என காரணங்கள் அடுக்கிக்கொண்டிருக்கும் பொழுதே, அண்ணே மொபைல பஸ்லயே விட்டுட்டேன், என்று பேருந்தைப் பார்த்தால், அது பின்பக்கம் காட்டி வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறது, நாகர்கோயிலை நோக்கி. ‘ஏறுங்க ஏறுங்க’ என என் பதற்றம் அவர் பற்றி, ஐந்தாறு கிலே மீட்டர் தாண்டி பஸ்ஸை வழிமறித்து நிறுத்தி, மொபைல் மீட்டதும் ஒரு ஸ்னேகப் புன்னகையும் தன் ஆட்டோவைத் தட்டி, ‘சும்மா பறக்கும்’ என்பதில் தொழில் விசுவாசமும், இறக்கி விட்டதும், நீங்க பார்த்து எவ்வளவு கொடுக்குணுமோ கொடுங்க’என்பதுமாய் என் மதுரை இன்னும் மனிதர்களை வைத்துக்கொண்டிருக்கிறது தன்னுள்.

***

அதிஷா எழுதிய “கெட்ட வார்த்தை” சிறுகதை இந்த வார விகடனில் வந்துள்ளது.

சில வாரங்களுக்கு முன்னர் பாரதி தம்பி எழுதிய ‘வீடு’(வூடு?) சிறுகதை விட்டுச் சென்ற தாக்கம் இன்னும் மனதை விட்டு அகலவில்லை. அதற்கு சற்றும் குறைவில்லாத தாக்கத்தை அதிஷாவின் சிறுகதை ஏற்படுத்தியது. அம்மா இறந்துவிட்டால் ஒருவன் என்னவெல்லாம் நினைத்து அழுவான்? என்பதை எல்லாம் தாண்டி எதார்த்தம் தரும் வலியையும், மன ஓட்டங்களையும் சொன்ன விதம் மிகப் பிடித்திருந்தது.

வாழ்த்துகள் அதிஷா.

****

ஈத்து முடிந்த அடுத்த நொடியில் அக்கி சகிதம் கிடக்கும் கன்றுக்குட்டியைப் பார்திருக்கிறீர்களா? தாய்ப்பசு நக்கி சுத்தம் செய்யச் செய்ய எழும், விழும். கால் நகங்களை உடைத்துவிட்ட பின் அந்த கன்றுக்குட்டி நடக்க முடியாத கத்துக்குட்டியாக மிரளும். கற்றுக் கற்று, முட்டி மோதி பின்னொரு பொழுதில் முட்டித்தூக்கும், அனல் பறக்கும் காளையாய் நின்று விளையாடும், ஒரு நாள்.

ஊருக்கு போனபொழுது ஈத்தெடுத்த கன்றைப் பார்த்ததும் தோன்றியது. திரட்டுப்பால் சுவைத்தது.விளையாட வேண்டும், ஒரு நாள்.

***

இந்த முறை மதுரைப் பதிவர்களைச் சந்தித்துவிட வேண்டும் என்பதில் தீர்மானமாய் இருந்தேன். கார்த்திகைப் பாண்டியன், தருமி அய்யா, மதுரை சரவணன், பாலா, ஸ்ரீ ஆகியோரைச் சந்தித்ததும் புத்தகக் கண்காட்சியில் அவர்களோடு வலம் வந்ததும் மகிழ்வான தருணங்கள். நன்றி மக்களே.
பதிப்பக சார்பில் வந்திருந்து விழாவைச் சிறப்பித்த பப்ளிசர் அகநாழிகை வாசுவும் மணிஜீயும் தங்கி இருந்த ஹோட்டல் அங்கேதான் இன்னும் இருக்கிறதா என அடுத்தமுறை போகும்பொழுதுதான் பார்க்க வேண்டும். ;)

***


மனிதனே போலும்...


பிளாஸ்டிக் தம்ளரைத் தூக்கிப்போய்
என்ன செய்யும் அந்தக் காக்கை?

போகும் வழியில் குஞ்சுகளுக்கு
தண்ணீர் மொண்டு போகுமோ?

அதிசயப் பொருளெனக் காட்டித்தான்
சாதுர்யக் கதைகள் பேசுமோ?

கூட்டிலதைப் பத்திரப்படுத்தி
தானியம் சேகரித்து வைக்குமோ?

என்ன செய்யும் அந்தக் காக்கை?

நழுவிக் கீழே வீழ்ந்தாலும்
மீண்டும் மீண்டும் கவனமாய்க்
கொத்திக் கொண்டு போகிறதே
என்ன செய்யும் அந்தக் காக்கை?

ஏதேனும் காரணம் இருக்கக்கூடும்
மனிதன் போல்தானே காக்கையும்
ஓரிரு குணங்கள் தவிர்த்து.

கவி ராஜமார்த்தாண்டன்.

****

உன் கண்ணு அப்பிடியே ஐஸ்வர்யா ராய் கண்ணுமாதிரியே இருக்குப்பா’ என்ற உடனே ‘அவ கண்ண நீங்க எங்க போய்ப் பார்த்தீங்க?” பட்டென பதில்கள் வரும். கண் என்பதால் சமாளிக்கலாம். இது போன்ற அதிமிஞ்சிய பொஸஸிவ்னஸ் எந்த வகையில் சேர்ப்பது எனத் தெரியவில்லை? ஆனால் இது இன்று நேற்றல்ல என்பது மட்டும் புரிகிறது. தெளிவாகவே.

இந்தக் குறள்:

நினைத்திருந்து நோக்கினும் காயும், ‘அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர்’ என்று
.

அவள் அழகை வியந்து, அவளையேப் பார்த்துக்கொண்டிருந்தால், ‘யாரின் அழகோடு என்னை ஒப்பிட்டு இப்படி பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்’ என்று கோவம் கொள்கிறாளாம். ஹுக்க்கும்.

இன்னும் கொஞ்சம் ஓவரா இந்தக் குறள்

தும்முச் செறுப்ப அழுதாள் ‘நுமர்உள்ளல்
எம்மை மறைத்தீரோ’ என்று.


தும்மலை அடக்கியவுடன், வேறொரு காதலி உன்னை நினைக்கிறாள். அதை என்னிடம் மறைப்பதற்காக தும்மலை அடக்குகிறீர்கள்’ என்று சொல்லி அழுதாளாம்.

கண்ணக் கட்டுதா?

தும்மலையும் காதலையும் மறைக்கமுடியாது என்பது இந்தக் குறளில் இருந்துதான் வந்ததோ?

வாழ்க வள்ளுவர்.

***

குறும்பட இயக்குனர் ஆதி, தன்னோடு பேசும் சந்தர்ப்பம் அளித்தார். பேச்சு குறும்படம் பற்றி சுற்றியது. நல்ல ஒன்லைனர் கிடைக்க மாட்டேங்குது என்றவரை மடக்கிப் போட்டு கழுத்தில் கத்தியை வைத்தேன்.

ஒரு கத இருக்கு ஆதி( லேடன் கிட்ட பேசுறியா?)

சொல்லுங்க நர்சிம்(வேற வழி?)

என்ற அந்த உரையாடல் முட்டி நின்றது ஒரு கதையின் முடிச்சில். சீரியஸான ஒன்லைனர் என்று சொல்லித்தான் சொன்னேன். நான் சொன்னதை ஏற்றுக்கொண்ட இயக்குனர் ஆதி க்ளைமேக்ஸ்தான் இதற்கு எல்லாமே. என்றார். அது மட்டும் சிக்கவில்லை.

சரி பதிவர்களிடமே கேட்டுவிடுவோம் என்று நினைத்து இதை இங்கே எழுதுகிறேன். முடிவுக்காட்சியை யோசித்துச் சொல்லுங்கள்.

‘அவன் ஒரு ஆண்மையற்றவன் என்பது தெரியாமல் அவன் தாயார் அவனுக்கு நிச்சயதார்த்த ஏற்பாடுகள் செய்கிறார். எவ்வளவோ மறுப்புகளை வேறு வழிகளில் சொல்லியும் கேட்டபாடில்லை எனும் நிலை. அன்றைய பொழுதில் அவன் மனதில் எழும் எண்ணங்கள். கண்ணாடி முன் நின்று அவன் படும் அவஸ்தைகள்’ இது தான் களம். அரைகுறை மனதோடு சரி என்னதான் நடக்கிறது பார்ப்போம் என்ற மனப்பான்மைக்கு வரும்பொழுது நிகழும் ஒரு சம்பவம் அல்லது பார்க்கும் ஒரு காட்சி, தான் சம்மதித்து தவறு செய்ய இருந்ததை எண்ணி வருந்தவைக்கிறது.’

அந்த சம்பவம் அல்லது காட்சி எதுவாக இருந்தால் இந்தக் குறும்படம் பேசப்படும்?

ரெடி..?


நன்றி.

58 comments:

வானம்பாடிகள் September 7, 2010 11:28 AM  

விருந்து:)

ரமேஷ் வைத்யா September 7, 2010 11:44 AM  

madurai... exlnt

பித்தன் September 7, 2010 11:56 AM  

//திரட்டுப்பால் சுவைத்தது.விளையாட வேண்டும், ஒரு நாள்.
//

y one day.....

♠ ராஜு ♠ September 7, 2010 11:58 AM  

ரமேஷ் வைத்யா ஒரு தடவைதான் திட்டினாரா..? :-)

முதல் பத்தியில் என் மதுரை மீதான காதல் பெருகியது.

கலகலப்ரியா September 7, 2010 12:15 PM  

ஆரம்பித்து முடிக்கும் வரை சுவாரஸ்யம்... கடைசியில் அந்தக் குறும்படச் சம்பவம்... வித்யாசமா ஏதாவது தோன்றினால் பார்க்கலாம்..

||ஒலிகளேதும் செய்துவிடவில்லை இரவின் நிசப்தத்தை.||

இந்த முரண்... க்ளாஸ்...

Balaji saravana September 7, 2010 12:29 PM  

இரவுப் பயணம் பற்றி விவரிப்புகள் எஸ்.ராவின் விவரிப்புகள் மாதிரி அடர்த்தியா இருக்கு தல!

//அதிகாலை மதுரையும் நடுஇரவு மதுரையும், மதுரை.// "நர்சிம்"

//திரட்டுப்பால் // சுவையை விவரிக்க முடியுமா என்ன?

ஆட்டோ அண்ணே, சிம்ப்ளி கிரேட்!

T.V.ராதாகிருஷ்ணன் September 7, 2010 12:33 PM  

aahaa..madurai :))

சாம்ராஜ்ய ப்ரியன் September 7, 2010 12:34 PM  

ஐ.. குறும்படமா?

நானும் ஓர் ஓரத்தில் யோசிக்கிறேன் :-)

☼ வெயிலான் September 7, 2010 12:36 PM  

// பப்ளிசர் அகநாழிகை வாசுவும் மணிஜீயும் தங்கி இருந்த ஹோட்டல் அங்கேதான் இன்னும் இருக்கிறதா என அடுத்தமுறை போகும்பொழுதுதான் பார்க்க வேண்டும். ;)//

:)))))

வி.பாலகுமார் September 7, 2010 12:44 PM  

மதுரை!!! :)

Mohan September 7, 2010 12:45 PM  

குறும்படத்துக்கான கான்செப்ட் நன்றாக இருக்கிறது!

Vidhoosh September 7, 2010 12:46 PM  

:) nice

மதார் September 7, 2010 12:52 PM  

Maduraiya ? Nanum nellai payanam mudithu inithe chennai vanthachu. Short film " satham podathe film nithin sathya padmapriya thodarbana katchigal tv il oduvathu parthu nam hero manam maralam ".

வித்யா September 7, 2010 1:15 PM  

என்’ணங்கள் நன்று.

அப்புறம் அந்த க்ளைமேக்ஸ் நான் சொன்னா எடுத்துக்குவீங்களா?

கண்ணாடி முன் நின்று தன்னை சரி பார்த்துக் கொண்டு பெண் பார்க்க கிளம்பி வெளியே வருபவனின் கண்ணில் இரு கை கொள்ளாமல் கண்ணாடி வளையல்கள் அணிந்த நிறை மாத கர்ப்பிணி மெல்லிய புன்சிரிப்பு/பூரிப்புடன் வாஞ்சையாய் அவள் வயிற்றை தடவிப் பார்க்கிறாள். அங்க கட் பண்றோம். ஹீரோ முகத்தின் ரியாக்‌ஷனை காட்றோம். படம் சூப்பர் ஹிட் ஆவாது??

பாலா அறம்வளர்த்தான் September 7, 2010 1:25 PM  

கலக்கல் என்'ணங்கள் பாஸ்.

உங்களுடைய 'இரவு' , பல வருடங்களுக்கு முன்பு அதிகமாக இரவு நேர பஸ் பயணம் செய்த அனுபவங்களை எண்ணிப் பார்க்க வைத்தது. வள்ளுவர் கலக்கல்.

வாழ்த்துகள் அதிஷா!!

ஆதிக்கு "Best of Luck"!!!

மதார் September 7, 2010 2:13 PM  

@vidhya madam , nanum climax kulanthaigal vaithe think pannen but athu rompa normal a therinthathu . S.RA vin Nedunkuruthi paditha pathipu 2naal munnar K Tv il partha satham podathe 2um kalanthu veru oru parvai vanthathu . Velipadaiyai solla vendame enruthan padathin katchigal mattum sonnen . Athai parthavargaluku vilangum .kulanthai kudumpam enru athaium thandi oru pennin iyalbana unarvugaludan vilaiyaduvathu . . . .angu nam hero sinthikalam . Thanks to S.RA.

புருனோ Bruno September 7, 2010 2:23 PM  

Regarding the short film is it impotence or sterility . . Both are different :) :)

கார்க்கி September 7, 2010 2:23 PM  

அதை நான் சொல்லலாமா?

ஆதி ஏன் இந்த படம் வேணாம்னு சொன்னார் தெரியுமா?

அவருடைய ஹீரோவின் ரசிகர்கள் பற்றிய பயம்தான் காரணமாம்... ஹிஹிஹி

கார்க்கி September 7, 2010 2:24 PM  

மீண்டும் என்’ணன்ங்களா? அல்லது மறந்துட்டிஙக்ளா?

VSP September 7, 2010 3:19 PM  
This comment has been removed by the author.
எம்.எம்.அப்துல்லா September 7, 2010 3:23 PM  

ஈத்து முடிந்த அடுத்த நொடியில் அக்கி சகிதம் கிடக்கும் கன்றுக்குட்டியைப் பார்திருக்கிறீர்களா? தாய்ப்பசு நக்கி சுத்தம் செய்யச் செய்ய எழும், விழும். கால் நகங்களை உடைத்துவிட்ட பின் அந்த கன்றுக்குட்டி நடக்க முடியாத கத்துக்குட்டியாக மிரளும். கற்றுக் கற்று, முட்டி மோதி பின்னொரு பொழுதில் முட்டித்தூக்கும், அனல் பறக்கும் காளையாய் நின்று விளையாடும், ஒரு நாள்.

ஊருக்கு போனபொழுது ஈத்தெடுத்த கன்றைப் பார்த்ததும் தோன்றியது. திரட்டுப்பால் சுவைத்தது.விளையாட வேண்டும், ஒரு நாள்.

//

நீயி நெஞ்ச நக்கிட்ட :)

VISA September 7, 2010 3:24 PM  

டாக்டர் புரூனோ கேட்ட கேள்வி மிகவும் முக்கியமானது.

அடுத்து குறும்படத்திற்கான முடிவு.
ஹீரோ அவனது அம்மா மட்டுமே கதையில் இருப்பதாய் தகவல்.

கிளைமாக்ஸ் 1 - ஆண்மை குறைவு.

அடுத்த நாள் இரவு அவன் ஒரு காட்சியை பார்க்கிறான். அவனது தாயை அறைக்கு வந்து கார் டிரைவர் எழுப்புகிறார். இருவரும் கார் ஷெட்டுக்குள் போகிறார்கள். இவன் முகமெல்லாம் வியர்க்க அதை கவனிக்கிறான். இருவரும் உள்ளே போய் கதவை சாற்றிக்கொள்கிறார்கள். ஒரு மணி நேரம் கழித்து வெளியே வரும் அவனது தாய் வீட்டுக்குள் வந்து சுவற்றில் மாட்டியிருக்கும் தன் கணவனின் புகைப்படத்தை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு அழுகிறாள்.

- தன் வாலிபம் உயிர்ப்போடு இருக்கிற போது கணவன் இறந்துவிட ஏதோ ஒரு நாள் தன் வாலிபத்தின் வலுவிழந்த நரம்புகள் அறுபட்டு அவனோடு இணங்க நேர்ந்து அதுவே காலப்போக்கில் பழக்கமாகி இத்தனை ஆண்டுகள் அவளையும் அறியாமல் அதை தொடரவேண்டியிருக்கிறதே என்று மனம் கசந்து தன் தாய் அழுவதை பார்க்கிறான் ஹீரோ.

கிளைமாக்ஸ் 2 - குழந்தையின்மை.

அடுத்த நாள் ஹீரோவுக்கு ஒரு தாட் வருகிறது. தனக்கு உண்மையாகவே குழந்தை பெறும் பாக்கியம் உள்ளதா இல்லையா அது வெறும் மன பிரம்மையா என்று.

அதனால் ஒரு மருத்துவரை அணுக முடிவு செய்கிறான். யாரை அணுகுவதென்ற குழப்பத்தில் தன் குடும்ப மருத்துவரையே அணுகலாம் என்று புறப்படுகிறான். தன் குடும்ப மருத்துவரை பார்த்து தன் நிலையை விளக்குகிறான். அவர் அதிர்ந்து போகிறார். இவனை பரிசோதித்து இவனுக்கு குழந்தை பெறும் பாக்கியம் இல்லை என்பதை உறுதி செய்கிறார்.

மேலும் ஒரு அதிர்ச்சி தகவலை சொல்கிறார். உன் அப்பாவும் குழந்தை பெறும் பாக்கியம் அற்றவர் என்கிறார். அப்போ நான் யாருக்கு....? என்று விக்கிது நிற்கிறான் ஹீரோ.


அந்Tஹ கேள்விக்கு விடை தெரியாமல் மனம் உடைந்து பல வருடங்களுக்கு முன் உன் அப்ப தற்கொலை செய்துகொண்டார் என்ற அதிர்ச்சி தகவலை சொல்ல ஹீரோ ........

"ஹீரோவுக்கு ஸ்டார்ட்டிங் டிரபிள் மட்டும் தான் " அப்படின்னு சொல்லி இன்னொரு கிளைமாக்ஸ் கேக்காதீங்க. ஸ்டார்ட்டிங் டிரபிள்ன்னா பேசாம ஹீரோவ என் கிட்ட அனுப்பி வையுங்க. ஸ்டார்ட்டிங் டிரபுள நம்ம குப்பத்து கோகிலா கிட்ட சொல்லி சரி பண்ணி கொடுத்துடுறேன்.

VISA September 7, 2010 3:24 PM  

டாக்டர் புரூனோ கேட்ட கேள்வி மிகவும் முக்கியமானது.

அடுத்து குறும்படத்திற்கான முடிவு.
ஹீரோ அவனது அம்மா மட்டுமே கதையில் இருப்பதாய் தகவல்.

கிளைமாக்ஸ் 1 - ஆண்மை குறைவு.

அடுத்த நாள் இரவு அவன் ஒரு காட்சியை பார்க்கிறான். அவனது தாயை அறைக்கு வந்து கார் டிரைவர் எழுப்புகிறார். இருவரும் கார் ஷெட்டுக்குள் போகிறார்கள். இவன் முகமெல்லாம் வியர்க்க அதை கவனிக்கிறான். இருவரும் உள்ளே போய் கதவை சாற்றிக்கொள்கிறார்கள். ஒரு மணி நேரம் கழித்து வெளியே வரும் அவனது தாய் வீட்டுக்குள் வந்து சுவற்றில் மாட்டியிருக்கும் தன் கணவனின் புகைப்படத்தை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு அழுகிறாள்.

- தன் வாலிபம் உயிர்ப்போடு இருக்கிற போது கணவன் இறந்துவிட ஏதோ ஒரு நாள் தன் வாலிபத்தின் வலுவிழந்த நரம்புகள் அறுபட்டு அவனோடு இணங்க நேர்ந்து அதுவே காலப்போக்கில் பழக்கமாகி இத்தனை ஆண்டுகள் அவளையும் அறியாமல் அதை தொடரவேண்டியிருக்கிறதே என்று மனம் கசந்து தன் தாய் அழுவதை பார்க்கிறான் ஹீரோ.

கிளைமாக்ஸ் 2 - குழந்தையின்மை.

அடுத்த நாள் ஹீரோவுக்கு ஒரு தாட் வருகிறது. தனக்கு உண்மையாகவே குழந்தை பெறும் பாக்கியம் உள்ளதா இல்லையா அது வெறும் மன பிரம்மையா என்று.

அதனால் ஒரு மருத்துவரை அணுக முடிவு செய்கிறான். யாரை அணுகுவதென்ற குழப்பத்தில் தன் குடும்ப மருத்துவரையே அணுகலாம் என்று புறப்படுகிறான். தன் குடும்ப மருத்துவரை பார்த்து தன் நிலையை விளக்குகிறான். அவர் அதிர்ந்து போகிறார். இவனை பரிசோதித்து இவனுக்கு குழந்தை பெறும் பாக்கியம் இல்லை என்பதை உறுதி செய்கிறார்.

மேலும் ஒரு அதிர்ச்சி தகவலை சொல்கிறார். உன் அப்பாவும் குழந்தை பெறும் பாக்கியம் அற்றவர் என்கிறார். அப்போ நான் யாருக்கு....? என்று விக்கிது நிற்கிறான் ஹீரோ.


அந்Tஹ கேள்விக்கு விடை தெரியாமல் மனம் உடைந்து பல வருடங்களுக்கு முன் உன் அப்ப தற்கொலை செய்துகொண்டார் என்ற அதிர்ச்சி தகவலை சொல்ல ஹீரோ ........

"ஹீரோவுக்கு ஸ்டார்ட்டிங் டிரபிள் மட்டும் தான் " அப்படின்னு சொல்லி இன்னொரு கிளைமாக்ஸ் கேக்காதீங்க. ஸ்டார்ட்டிங் டிரபிள்ன்னா பேசாம ஹீரோவ என் கிட்ட அனுப்பி வையுங்க. ஸ்டார்ட்டிங் டிரபுள நம்ம குப்பத்து கோகிலா கிட்ட சொல்லி சரி பண்ணி கொடுத்துடுறேன்.

நர்சிம் September 7, 2010 3:37 PM  

//புருனோ Bruno said...

Regarding the short film is it impotence or sterility . . Both are different :) :)//

Impotence.

M.G.ரவிக்குமார்™..., September 7, 2010 3:38 PM  

க்ளைமாக்ஸ் காட்சி!..
ஒரு நாய் படுத்திருக்கு!..அதை சுத்தி உக்காந்து அதோட ௫ குட்டிகளும் பால் குடிச்சிக்கிட்டிருக்கு!.. அப்படியே காமெரா திரும்பி ஹீரோவைக் காட்டுது!.....

புருனோ Bruno September 7, 2010 3:53 PM  

// இரு கை கொள்ளாமல் கண்ணாடி வளையல்கள் அணிந்த நிறை மாத கர்ப்பிணி மெல்லிய புன்சிரிப்பு/பூரிப்புடன் வாஞ்சையாய் அவள் வயிற்றை தடவிப் பார்க்கிறாள். //

கதாநாயகனுக்கு மலட்டுத்தன்மை என்றால் இது சரி :) :)

இங்கு பிரச்சனை ஆண்மைக்குறைவு அல்லவா

புருனோ Bruno September 7, 2010 3:54 PM  

VSP

பலூன் கதையில் உள்குத்து ஏதாவது இருக்கா :) :)

புருனோ Bruno September 7, 2010 3:57 PM  

ஆண்மைக்குறைவு, மலட்டுத்தன்மை இரண்டிற்கும் வித்தியாசம் குறித்து சில விபரங்கள் இந்த இடுகையில் உள்ளன

நாய்க்குட்டி மனசு September 7, 2010 4:37 PM  

அதிகாலை மதுரையும் நடுஇரவு மதுரையும், மதுரை.//

அப்போ மீதி நேரம் எல்லாம் மதுரை மாறிடுச்சா?
என்'ணங்கள் திரும்பியதற்கு வாழ்த்து.
அந்தஅதிமிஞ்சிய பொஸஸிவ்னஸ் தான் இருவருக்கு இடையே இருக்கும் அன்பை இறுக்கி வைக்கும்.
மதுரை வந்திருந்தீங்களா? ஒரு எழுத்தாளரை பார்க்க மிஸ் பண்ணிட்டேன் போலிருக்கே

ILA(@)இளா September 7, 2010 4:38 PM  

//ரெடி..?/
ரெடி ஜி, பின்றோம் ஜி, ஓகே ஜி

சுசி September 7, 2010 4:45 PM  

இரவும், மதுரையும், கன்னுக் குட்டியும் என் எண்ணங்களில் சுத்தி சுத்தி வருது..

ஆதியும் மீதியும் நல்லா இருக்குங்க.

மறத்தமிழன் September 7, 2010 4:48 PM  

நர்சிம்,

கலக்கல் என்'ணங்கள்..

குறிப்பாக இரவின் நிசப்தம்...ஆட்டோ ஓட்டுனர்...

ஈன்ற கன்று...அதன் முயற்சி...தாய் சேயை நக்கும் அழகு...சீம்பால்(திரட்டுப்பால்)... ஆஹா...

மறத்தமிழன் September 7, 2010 4:52 PM  

நர்சிம்,

சொல்ல மறந்துட்டேன்...

நம்ம மதுரை மதுரை தான் :))

ஆதிமூலகிருஷ்ணன் September 7, 2010 5:20 PM  

பகிர்வுகள் வழக்கம் போல நன்று.

//குறும்பட இயக்குனர் ஆதி, தன்னோடு பேசும் சந்தர்ப்பம் அளித்தார். // இந்த நக்கலுக்கு ஒண்ணும் கொறச்சலில்லை.. நம்மள கும்முறதுன்னா வேண்டியவங்க, வேண்டாதவங்கன்னு எல்லாத்துக்குமே கொண்டாட்டம்தான். :-))

ஆதிமூலகிருஷ்ணன் September 7, 2010 5:22 PM  

வித்யாவின் முடிவு மிகச்சிறப்பாக இருக்கிறது. கொஞ்சம் மொக்கையில் பிராக்டிஸ் பண்ணிகிட்டு சீரியஸா ஒரு படம் பண்ணும் போது இதை பண்ணிப் பார்க்கலாமா நர்சிம்.?

குசும்பன் September 7, 2010 5:23 PM  

//வாசுவும் மணிஜீயும் தங்கி இருந்த ஹோட்டல் அங்கேதான் இன்னும் இருக்கிறதா என அடுத்தமுறை போகும்பொழுதுதான் பார்க்க வேண்டும். ;)//

மதுரையிலேயே லந்து கொடுக்கிறாரா? அண்ணன் அழகிரியிடம் இவரு எழுதும் கவிதைகளை ஒரு பிரிண்ட் எடுத்து கொடுத்துவிடுவோமா?:))

புருனோ Bruno September 7, 2010 5:29 PM  

ஆதி பாஸ்

வித்யாவின் முடிவு மலட்டுத்தன்மைக்குத்தானே

இங்கு பிரச்சனை ஆண்மைக்குறைவு அல்லவா

பரிசல்காரன் September 7, 2010 5:29 PM  

//வாசுவும் மணிஜீயும் தங்கி இருந்த ஹோட்டல் அங்கேதான் இன்னும் இருக்கிறதா என அடுத்தமுறை போகும்பொழுதுதான் பார்க்க வேண்டும்//


பின்ற!

குறும்படத்துக்கான வந்து விழும் யோசனைகளும், டாக்டரின் களமிறங்கலும் சபாஷ் சொல்ல வைக்கிறது. ஆதி மிக மகிழ்வாய் உணர்ந்துகொண்டிருப்பார்.

ஆதிமூலகிருஷ்ணன் September 7, 2010 5:43 PM  

@டாக்டர்,

அடப்போங்க சார். கதையை மலட்டுத்தன்மைன்னு மாத்திட்டா போச்சுது. ஹிஹி..

இரும்புத்திரை September 7, 2010 6:36 PM  

எனக்கு ஒரு சான்ஸ் ப்ளீஸ்.

நிச்சயம் செய்ய அக்காவோடு குழந்தையும் வந்திருக்கிறது.(அக்கா இல்ல என்று மறுக்க முடியாது).

"மாமா உனக்கு கல்யாணமா.." என்று கேட்கிறாள்.

"ம்.." ஒற்றை வார்த்தையில் வார்த்தையில் பதில் சொல்கிறான்.

"அப்போ எனக்கு ஒண்ணு,ரெண்டு,மூணு இல்ல நாலு பாப்பா வேண்டும்.." என்று பத்து விரல்களை விரித்து காட்டுகிறாள்.(இதுல எல்லாம் லாஜிக் பாத்தாலும் பதில் இருக்கு.அந்த பொண்ணுக்கு கையில பத்து விரல் இருக்கு..வீட்ல தம்பி பாப்பா கேட்டு அவங்க அப்பா உதை வாங்கி இருப்பார்)

இங்க ஒண்ணுக்கே வழியில்லை.இதைத்தான் அறுக்க மாட்டாதவன் இடுப்பை சுத்தி முப்பதெட்டு கறுக்கருவாளாம் என்று சொல்வாங்க.

ஆதி எனக்கு உதவி இயக்குனர் சான்ஸ் உண்டா. டாக்டர் புருனோ கேட்டதற்கு இது ஒத்து வரும் என்று நினைக்கிறேன்.

இன்னும் பாக்யராஜ் பாணியில்,சாரு பாணியில்,ஜெயமோகன் பாணியில்,வாரமலர் பாணியில் முடிவு சொல்கிறேன்.என்ன கொஞ்சம் காஸ்ட்லி.

இரும்புத்திரை September 7, 2010 6:37 PM  

ரமேஷ் வைத்யா அண்ணன் எனக்கு ரொம்ப நாளுக்கு முன்னாடி தந்த வாக்குறுதியை மறந்து விட்டார் என்று நினைக்கிறேன்.

rajasundararajan September 7, 2010 6:39 PM  

ராஜமார்த்தாண்டனுடைய கவிதை ஒன்றை இட்டிருக்கிறீர்கள். அதுபற்றிப் பேச வாசகர்கள் யாரும் முன்வராதது வருத்தம் தருகிறது. 'புரியாவிட்டாலும் - நமக்குச் சம்பந்தம் இல்லாவிட்டாலும் - ஒரு கருமம் காரணம் இல்லாமல் இருக்க முடியாது,' என்கிறது இக் கவிதை.

//தான் ஒரு ஆண்மையற்றவன் என்பது தெரியாமல் அவன் தாயார் அவனுக்கு நிச்சயதார்த்த ஏற்பாடுகள் செய்கிறார்//

'செய்கிறார்' என்னும் வினைமுடிபு யாரைச் சுட்டுகிறதோ, 'தான்' என்பதும் அவரையே சுட்டும். அது காரணம் இந்த வாக்கியம் குழப்பமான ஒன்று. 'தாயார்' என்னும் இடத்தில் 'தந்தையார்' என்று இட்டுப் பாருங்கள் தவறு புரியும். 'அவன்' என்று தொடங்குவதே சரி.

குறும்படம் தமிழில்தானே எடுக்கப் போகிறீர்கள்? மலையாளப் படம் என்று புரிந்துகொண்டுவிட்டார் பாருங்கள் VISA.

//ஈத்து முடிந்த அடுத்த நொடியில் அக்கி சகிதம் கிடக்கும் கன்றுக்குட்டியைப் பார்திருக்கிறீர்களா? தாய்ப்பசு நக்கி சுத்தம் செய்யச் செய்ய எழும், விழும். கால் நகங்களை உடைத்துவிட்ட பின் அந்த கன்றுக்குட்டி நடக்க முடியாத கத்துக்குட்டியாக மிரளும். கற்றுக் கற்று, முட்டி மோதி பின்னொரு பொழுதில் முட்டித்தூக்கும், அனல் பறக்கும் காளையாய் நின்று விளையாடும், ஒரு நாள்.// இதுதான் அந்தக் குறும்படத்துக்கு க்ளைமாக்ஸ்.

காவேரி கணேஷ் September 7, 2010 7:24 PM  

நர்சிம்,

மதுரையை பற்றி உங்கள் எழுத்து நடையில் ஒரு புத்தகம் எழுதவும்.

வழிப்போக்கன் - யோகேஷ் September 7, 2010 7:42 PM  

nice one Narsim..
thiratippal taste cannot be beaten with any other sweets........

பாலா அறம்வளர்த்தான் September 7, 2010 7:46 PM  

ஆஹா - கவிஞரின் பார்வையை பார்த்து பிரமிக்கிறேன் - கொஞ்சம் கூட தோணலையே.
நர்சிம் - தெரிந்தே தான் கன்றுக்குட்டியை பற்றி எழுதினீர்களா பாஸ்?

இரும்புத்திரை September 7, 2010 7:49 PM  

காதல் வந்தால் சொல்லி அனுப்பாதே.நான் வேறு வேலையாக இருக்கிறேன்.

@ராஜசுந்தர்ராஜன்

நான் கவிதை,குறள் என்று வந்தாலே ஸ்கிப் செய்து விடுவேன். இந்த கவிதை எனக்கு நன்றாக புரிந்த காரணத்தால் இதை கவிதை என்று மற்றவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை போலும்.

காரணம் - கவுச்சி சாப்பிட்டவன் குடித்த கிளாஸாக இருக்குமோ. இல்லை மின்னலே பாணியில் இன்னொரு காக்கை கல் போட்டு குடித்ததா.

கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.

இரும்புத்திரை September 7, 2010 7:50 PM  

பேக் டூ பார்ம் தலைவரே..எதுக்கும் ரெடியா இருங்க..

A Simple Man September 7, 2010 8:46 PM  

//'செய்கிறார்' என்னும் வினைமுடிபு யாரைச் சுட்டுகிறதோ, 'தான்' என்பதும் அவரையே சுட்டும். அது காரணம் இந்த வாக்கியம் குழப்பமான ஒன்று. 'தாயார்' என்னும் இடத்தில் 'தந்தையார்' என்று இட்டுப் பாருங்கள் தவறு புரியும். 'அவன்' என்று தொடங்குவதே சரி.
//
I also noted this point. Narsim please correct it.

இரா கோபி September 7, 2010 9:38 PM  

நான் கொஞ்சம் முயற்சி செய்கிறேன்.

ஆண்மைக்குறைவு என்றால்:

1 . நம் ஹீரோ டிவி போடுகிறார். டாக்டர் ருத்ரனும் ஷாலினியும் விஜய் டிவியில் இந்த டாபிக் பற்றிப் பேசுகிறார்கள். இதை மறைப்பதால் உண்டாகும் நடைமுறை சிக்கல்கள், மன உளைச்சல் பற்றி ஆணித் தரமாகப் பேசுகிறார்கள். நம் ஆள் கல்யாணம் வேண்டாம் என்று முடிவெடுக்கிறார்.

2 . நம்மைப் போன்ற பதிவர் ஒருவர் பள்ளிகொண்டபுரம் நாவலுக்குப் போட்ட விமர்சனத்தைப் படிக்கிறார் நம் ஹீரோ. தன் முடிவை மாற்றிக் கொள்கிறார்.

3 . கிராவும் ' மறைவாய்ச் சொன்ன கதைகள்' புத்தகத்தில் இது பற்றிச் சொல்லி இருக்கக் கூடும். எதுவும் நினைவில் இல்லை.

மலட்டுத்தன்மை என்றால்:

அவருடைய நண்பர் ஒரு குறும் செய்தி அனுப்புகிறார். இரட்டைக் குழந்தைகளுக்கு அப்பா ஆனதாக. எதிர் வீடு மாமா தன் பையனின் காது குத்திற்காக வந்து அழைப்பிதழ் தருகிறார். மூன்றாம் வீட்டு மாமி தன் மகனின் உபனயனத்திற்கு அழைப்பிதழ் தருகிறார். வெறுப்பாகி டிவி போடுகிறார். மாக்ஸ் நியூ யார்க் லைப் இன்சூரன்ஸ் விளம்பரம். குழந்தை டாடி என்பது, பனானா என்பது, செக்கொச்லோவோக்கிய என்று சொல்ல முயற்சி செய்து வேறு ஏதோ சொல்வது. எல்லாம் சேர்ந்து ஹீரோவைக் கல்யாணம் வேண்டாம் என்று முடிவெடுக்க வைக்கிறது.

ப்ரியமுடன் வசந்த் September 7, 2010 9:59 PM  

என்'ண்ணங்கள் மீண்டதில் மிக்க மகிழ்ச்சி!

கவி ராஜமார்த்தாண்டனின் கவிதை பகிர்வு அருமை!

அதிஷாவுக்கு மீண்டும் வாழ்த்துகள்

ஆதிக்கு பெஸ்ட் க்ளைமேக்ஸ் கிடைக்க வாழ்த்துகள்!

விசா :)

rajasundararajan September 8, 2010 12:24 AM  

நன்றி, நர்சிம். 'ஆனந்தவிகடன்' இதுபோல் ஆகச் சிறந்த படைப்புகளையும் அவ்வப்போது பொதுப்பித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அது எவ்வப்போது என்று ஆரூடம் அறிய வழியில்லாததால், மற்று கொப்பூழ், முலைப் படங்களுக்கா இந்த விலை என்று நான் வாங்குவதில்லை.

சற்று முன்புதான் டாக்டரம்மா வீட்டில் 'ஆனந்தவிகடன்' கிடக்கக் கண்டு, அதிஷாவின் 'கெட்ட வார்த்தை' கதையை வாசித்தேன். அவர் வாழ்க!

தாயைப் பற்றிய மிகச் சரியான புரிதல்/ படிமம்: பசி தீர்ப்பவள் தாய்; மகன் சாப்பிட்டானா, யாரையும் சாராமல் நிற்கிறானா இந்தக் கவலைகளுக்கு உரியவள் தாய். பசி என்பது பற்றாக்குறை; வெறுமை. கதை நெடுகிலும் காணக் கிடப்பது இதுதான். அத்தைபெண்ணின் தாவணி விலகலும் பசியோடு முடியப்படுகிறது.

வாசிப்பின் முடிவில், பசியோடான சமன்பாட்டில் தாயை இட்டுப் பார்க்க நேர்ந்து எனக்கும் அழுகை வந்தது.

Truth September 8, 2010 3:23 AM  

குறும்படம் - மொக்கையா ஒன்னு தோனுது. சொல்லலாமா?

இங்க நான் பாத்து ரொம்ப நொந்துகிட்ட ஒரு விஷயம்.

NRIகள் தம் பிள்ளைகளுக்கு தமிழ் (தாய்மொழி) சொல்லித் தராம ஆங்கிலத்தை ஊட்டுவது போல் ஒரு காட்சி.

அங்கிலத்தில் பேசுவது அறிவுடைமை, தமிழில் பேசுவது அறிவின்மை என்று எண்ணும் இவர்கள், தம் வாரிசுகளுக்கு தாய்மொழி ஊட்டாமல் இருப்பது கூட ஒரு வகையான மலட்டுத்தன்மை தானே.

இதை மொக்கையாவும் எடுக்கலாம், நல்ல சிந்தனையா கூட எடுக்கலாம்.

@வித்யா, நீங்க சொன்னமுடிவு உண்மையில் நல்லா இருக்கு. ஆனா, அதை பாகியராஜ் டைரக்ட் பண்ணனும், ஆதி இல்லை :-)

Truth September 8, 2010 3:58 AM  

மலட்டுத்தன்மை Vs குழந்தையின்மை

ஏன்யா, நீங்க படம் எடுக்க போறீங்களா இல்லை, ஆராய்ச்சி பண்ண போறீங்களா? :-)

Sethu September 8, 2010 6:06 AM  

"அவன் தாயார் அவனுக்கு நிச்சயதார்த்த ஏற்பாடுகள் செய்கிறார்."

தாயார் செய்கிறார் என்று சிறு வயதிலிருந்து கேட்டிருக்கிறேன். சேலம் திருச்சி மாவட்டங்களில் இப்படி பேசுவதை கேட்டிருக்கிறேன். என் தமிழ் ஆசிரியரும் உபயோகப்படுத்தி உள்ளார். "தாயார் செய்கிறார்" என்பது தந்தைக்கு நிகராக தாயும் மதிக்கபடுவதை குறிக்கும்.

முகிலன் September 8, 2010 8:09 AM  

மதுரை - எத்தனை முறை பார்த்தாலும் பார்த்துப்பருகினாலும் திகட்டாதது..

கெட்டவார்த்தை படிக்க வேண்டும்.

குறும்படத்துக்கு என் கிளைமேக்ஸ்(ஸ்).

மலட்டுத் தன்மை:
வெளியே வரும் அவன் யாரோ ஒரு பெண் தன் மருமகளை அருகில் வைத்துக் கொண்டே இன்னொரு பெண்ணிடம் - “உம்பையனுக்கு பொண்ணு பாக்க அந்தத் தரகரையா புடிச்சிருக்க? இந்தா, இவளைப் போயி மகாலட்சுமினு சொல்லி அந்தப் பய என் மவன் தலையில கட்டி வச்சிட்டான். வந்து நாலு வருசமாச்சி. ஒரு புழு பூச்சியக் காணோம். நேத்து கல்யாணமானதெல்லாம் வயித்தத் தள்ளிக்கிட்டு நிக்கிது. மலட்டுச் சிறுக்கு என்னிக்கி விடியப் போவுதோ?” என்று பேசிக் கொண்டிருக்க, மருமகள் வெடித்து வரும் அழுகையை உதட்டைக் கடித்து அடக்குகிறார்... கண்களால் கட்டுப் படுத்தமுடியாமல் கண்ணீர் வழிகிறது...


ஆண்மைக் குறைவு:
ஒரு குழந்தை ஜன்னலில் உட்கார்ந்து கொண்டு வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒரு மாற்றுத் திறனாளி (கால் ஊனமுற்ற சிறுவன்) சாலையில் உட்கார்ந்திருக்கிறான். அவன் கையில் ஒரு பலூன். குழந்தை பலூனைப் பார்த்து ஆசையாகக் கை நீட்டுகிறது. இந்தச் சிறுவனும் எட்டி அதற்கு அந்த பலூனைத் தர முயற்சிக்கிறான். இவனால் முடியவில்லை. குழந்தைக்கும் எட்டவில்லை. பலூன் கிடைக்காத ஏமாற்றத்தில் குழந்தை வீறிட்டழுகிறது....

இரசிகை September 8, 2010 8:55 AM  

nantru...!

Naren September 8, 2010 4:53 PM  

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.

விக்னேஷ்வரி September 8, 2010 8:44 PM  

என் மதுரை - இதில் தான் இருக்கு எல்லாம். உங்கள் பயண மகிழ்ச்சி என்னையும் தொற்றிக் கொண்டது.