எல்லாப் படங்களையும் பார்த்துவிட்டாலும் சில படங்களைப் பார்க்கும்பொழுது மட்டும்தான் அதுகுறித்து எழுதத் தோன்றுகிறது. ஆடுகளம். துரோகம் ஆடியது,ஆடுகின்றது,ஆடும் என்ற வினைத்தொகையின் பண்பு, உலகம் இருக்கும் வரை. ஒருவரின் அன்பில்,அவர் நம்மீது கொண்டிருக்கும் அக்கறையில் திக்கித்திணறி நாம் மூர்ச்சையாகிப் போகும்பொழுது முதுகில் விழும் குத்து...ஆடுகளம்.
சேவல் சண்டையைப் பற்றிய வரலாற்று குறிப்போடு டைட்டில் தொடங்குகிறது. பொல்லாதவன் பாணியில் முதலில் க்ளைமேக்ஸ்..அதிலிருந்து பின்னோக்கி என வெற்றி ஃபார்முலாவை மீண்டும் கையாண்டிருக்கிறார்,வெற்றி-மாறன்.
கதையைப் பற்றிப் பேசுவதை விட அதற்கும் அப்பால் பேச நிறைய இருக்கிறது இப்படத்தில்.
சினிமாவில் வில்லன், நாயகன், குணச்சித்திரம் என அவரவர் பாத்திரம் உணர்ந்து எப்பொழுதுமே நல்லவனாகவும் எப்பொழுதுமே கெட்டவனாகவும் சித்தரிக்கப்பட்டுவந்ததில் இருந்து முற்றும் மாற்றாக, அன்றாடத்தில் எப்படி அவ்வந்த சூழலுக்கு ஏற்ப வாழ்கிறோம் என்பதை மிக நுட்பமாகக் காட்சிப்படுத்தி இருப்பதே இப்படத்தின் ஆகச் சிறப்பு.
கிஷோர்/துரை பாத்திரம். கொஞ்சம் பணமும் பார் வைக்குமளவிற்கு செல்வாக்கும் இருக்கும் ஒரு மதுரைக்காரன் எப்படி இருப்பானோ அப்படியே இப்பாத்திரம். மிகக் கூர்ந்து கவனித்ததில் இந்தப் படத்தின் அற்புதமானப் பாத்திரம் என்றால் அது துரைதான். ஒரு இடத்தில் கூட இயல்பிற்கு மீறியச் செய்கையைச் செய்யவில்லை.
எதிர் அணியில் இருந்த இன்ஸ்பெக்டர் தன்னை ஸ்டேஷனில் இருந்து விடுவிக்க உதவியதும் மறுநாள் அவர் வீட்டிற்கே சென்று நன்றி தெரிவிப்பது.
தன் கூட்டாளி அயூப்பை அதே இன்ஸ்ப்பெக்டர் கொன்றது தெரிந்து, தண்ணியடித்துவிட்டு, ‘இப்பிடி எல்லாத்தையும் செஞ்சுப்புட்டு ஒண்ணுமே தெரியாதமாதிரி நிக்கிறாங்களே’ என அவரை அடிக்கப்போவது.
குருவின் பேச்சைக் கேட்காத தனுஷின் முதல்சுற்று போட்டிக்கு, ‘விடுண்ணே சின்னப்பய,தெரியாம பண்ணிட்டான்’ என ஆதரிப்பது. மீண்டும் திமிறில் தனுஷ் களம் இறங்கும்பொழுது, ‘என்னடா ஓவராப் போற’ என தனுஷை எதிர்ப்பது.
மீண்டும் தனுஷ்க்கு வாழ்க்கையில் செட்டில் ஆகும் வாய்ப்பு வரும் எனத் தெரிந்ததும், தனுஷை ஆதரித்து, மூன்று லட்சம் வாங்கித் தருவது.
குரு அளவிற்கு மீறி கோவப்பட்டதும், ‘எனக்கென்னமோ நீ பண்றது தப்புன்னு தோணுதுண்ணே’ என குருவிடம் நியாயத்தைப் பேசுவது.
கடைசிவரை துரைக் கதாப்பாத்திரம் எந்த இடத்திலும் பிசகவே இல்லை.
பேட்டைக்காரன் என்ற பெரியசாமி : நான் சில மாதங்களுக்கு முன்னர் ‘அம்பத்தாறு’ என்ற கதையை எழுதி இருந்தேன். அந்த அம்பத்தாறு பாத்திரத்தின் குணாதிசயம், அடிப்படையில் நல்லவன், ஆனால் எவராவது ஊரில் நல்லபெயர் வாங்கினால் பொறுக்காது, தனக்கு யாராவது துரோகம் செய்வதாகப் பட்டால், நேரடியாக மோதாமல் கெடுதல் செய்வது.
இந்த குணாதிசயத்தையும் தாண்டிய படைப்பு பேட்டைக்காரன். அடிப்படையில் திறமையான, நல்லவர் தன் சிஷ்யன் தன்னை மீறும் பொழுது ஏற்படும் மனஉளைச்சலை எப்படி துரோகமாக மாற்றுகிறார் என்பதே.
இவர் பேச்சை மீறி தனுஷ் களத்தில் இறங்கும்பொழுது, கோயில் முன்னர் நின்று கொண்டிருப்பார் பேட்டைக்காரன். ‘அண்ணே நம்ம சேவ ஜமீனாகிப்போகும் போலண்ணே, தோத்துறும்’ என ஒருவன் வந்து சொன்னதும், லேசான திருப்தியோடு கடவுளைப் பார்க்கும்பொழுது அவரின் குரூரம் தெரிகிறது. ஆனாலும் தனுஷ் முதல் சுற்றில் வெற்றிப் பெற்றதும், தன் மானம் காப்பாற்றப்பட்டது போன்ற திருப்தியும் அடுத்த முகபாவனையில்.
‘அதிர்ஷ்டம் அவன செயிக்க வச்சுருச்சுடா’ என மீசை மண் வசனத்தில் சமாளிப்பது.
‘இல்லண்னே, அன்னிக்கு மாதிரி ஏதாச்சும் மாத்தி ஆகிப்போச்சுண்டா’ என சேவல் வாங்க வருபவன், இவரின் பேச்சை மீறி வேறு சேவல் கேட்கும்பொழுது, மனம் முழுதும் வன்மம் குடிகொள்வதை டாப் ஆங்கிளில் பேட்டைக்காரனின் முதுகில் காட்டி இருப்பது.
இந்தக் கதாப்பாத்திரத்தின் மிகச்சிறந்த டீட்டெய்லிங், கடைசியில் எல்லா உண்மையும் தெரிந்த தனுஷை குத்தக் கத்தியைக் கையில் எடுக்கும் பேட்டைக்காரன், தனுஷ் சொல்லும், ‘வெளில தெரிஞ்சா இம்புட்டு நாளா உனக்கு இருந்த பேரு என்னண்ணே ஆகும்,’ என்ற வார்த்தைகளைக் கேட்டதும், கத்தியின் முனை திசை மாறும். அவ்வளவே. தன்மீது இருந்த பிம்பம் சிதைபடும்பொழுது ஒருவன் என்ன செய்வானோ அதைச் செய்துகொள்ளும் அற்புத பத்திரப்படைப்பு பேட்டைக்காரன்.
தனுஷ்/கருப்பு : I AM LOVE YOU என்ற மதுரை திருப்/தென்பறங்குன்ற கைலி இளைஞன். எல்லாக் கோவத்தையும் தாயிடம் காட்டும் சராசரியாக, டைவாவைக் கரெக்ட்பண்ணும் காதலனாக, நல்லது செய்யும் கிஷோரை அண்ணண் நிலையில் வைக்கும் நண்பனாக, துரோகம் தெரியவந்ததும் வெடித்துச் சிதறும் சிஷ்யனாக...
மிகக் கச்சிதமாய் செய்திருக்கிறார் தனுஷ். மதுரை பாஷை கொஞ்சம் தடுமாறினாலும், ஒன்றச் செய்துவிடுகிறது. தனுஷிடம் இருக்கும் நடிப்புத் திறமையே இவரை இந்த இடத்தில் வைத்திருக்கிறது என்பதை நிரூபிக்கும் படம் இது. புதுப்பேட்டையில் ஒரு பெரிய கூட்டமே அடித்துத் துவைத்தும், முகமெல்லாம் ரத்தமாக, எழுந்து நிற்கும்பொழுது ஒரு சிங்கத்தின் பார்வையை ரீரிக்கார்டிங்கோடு செல்வராகவன் கொண்டு வந்திருப்பார். அந்தக் காட்சி தனுஷின் மிகச்சிறந்த நடிப்பிற்கு ஒரு உதாரணம். அதைப்போல இந்தப் படத்தில் நிறைய இடங்களில்.
அயூப் : ஃபாரின் சரக்கை ஆசையாக, இதை திருப்பி கேட்க மாட்டியே என வெள்ளந்தியாக கேட்பதாகட்டும், தன்னை விலை பேசுவது தெரிந்த அடுத்த நிமிடத்தில், “என்னடா வேணும் உங்களுக்கு” என அதே பாட்டிலை தரையில் எறிந்து விட்டு, நாலு கிளாஸ் சாராயத்துக்கே இம்புட்டு கேட்குறீங்களேடா, நாப்பது வருச பழக்கம்னா எம்புட்டு இருக்கும்’ என்று நிற்பது கம்பீரம்.
ஊளை : மதுரையில், கிட்டத்தட்ட எல்லா கேங்கிலும் ஒரு ஊளை கேரக்டர் உண்டு. அவ்வளவு தத்ரூபமாக செய்திருக்கிறார். ‘எந்தத் தெருடா ஏழுமணிக்கு வெறிச்சோடி இருக்கு, தப்பாத் தெரிதே மாப்ள’ இந்த ஒரு வசனம் போதும். அவ்வளவு கச்சிதமான ஏற்ற இறக்கம். படம் முழுதும் வரும் இப்பாத்திரம் தனுஷ் என்ற பாத்திரம் எது செய்தாலும் அதற்கு உடன்பட்டு எப்பொழுதும் உடன் இருக்கும் நண்பன் பாத்திரம். காதலியைத் தேடிப்போகும் பொழுது உடன் வந்து கம்பெனி கொடுப்பதில் துவங்கி இறுதியில் வழியனுப்பி வைக்கும் வரை இருக்கும் மதுரை நட்பை அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கும் இந்தப் பாத்திரமும் கிஷோருக்கு அடுத்தபடியாக அமைந்திருக்கும் அற்புதம்.
தவிர, சில சுவாரஸ்யங்கள் :
1.சேவல் சண்டையின் நுட்பங்களை உள்வாங்கி அற்புதமாக திரையில் கொண்டு வந்திருப்பது. குறிப்பாக இருவாசியின் பொழுது ஜெயிப்பது யார் என சீட்டின் நுனிக்கு நம்மை இட்டுச் சென்றது.
2. மதுரை என்றாலே அங்கிட்டு இங்கிட்டு அறுவா என்பது மட்டும் அல்ல, அதையும் தாண்டிய ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை காட்டிய விதம்.
3. சேவல் சண்டை நடக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஃப்ளெக்ஸ் பேனரில், கிஷோர் ராஜா உடை அணிந்து நிற்பார். பேட்டைக்காரன் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பார். மதுரையின் அன்றாட காட்சிகள் இவை. இதில் துவங்கி ஒவ்வொரு காட்சியில் நுட்பங்களை காட்சிப் படுத்திய விதம்.
4. ஒவ்வொரு பாத்திரத்தின் தேர்வும், அவர்கள் ஒரு இடத்தில் கூட தேவையில்லாமல் கையை என்ன பண்ணுவது என்று தெரியாமல் நிற்பதோ, மற்றவர் வசனம் பேசும்பொழுது அடுத்த வசனத்திற்கு ரெடியாக துடித்துக்கொண்டு நிற்பதோ இல்லாமல், வெகு இயல்பாக வந்து போவது.
5. வாழ்வினூடாக பாடல் இருப்பதை அப்படியே வசனங்களுக்கு ஊடாக சேர்த்து இருப்பது..யாத்தேப் பாடலின் பொழுது தனுஷின் குதூகலம் நம்மையும் தொற்றச் செய்துவிடும் கேமிரா/டான்ஸ்/இசை.
6. இரண்டாம் பாதியில், ஒரு இடத்தில் கூட நாம் நினைப்பது நடக்காதது போல அமைத்திருக்கும் திரைக்கதை. இன்ஸ்பெக்டர் மொட்டை அடித்ததும் அறுவா பறக்கும் என்று எதிர்பார்த்தால் ..இல்லை. இதே நிலம உனக்கும் வரும்ணே..என தனுஷ் கிஷோரைப் பார்த்து சொல்லும் பொழுது கிஷோரின் நிலை அப்படி ஆவது இல்லை, காதலி இனி அவ்வளவுதான் எனில் அவ்வளவு இல்லை என மிக இயல்பாய் சம்பவங்களைக் கடந்திருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.
7. ‘என்கிட்டயே உன்னத் தப்பாச் சொல்றாரு’ என காதலியின் நம்பிக்கை.இந்த வசனம் வந்ததும் கைத்தட்டல் எழுகிறது அரங்கில். சாதாரண வார்த்தைகளில் வாழ்வைக் காட்டுவதே வசனம். விக்ரம் சுகுமாரன் & வெற்றி மாறன் இருவரின் வசனங்கள் இயல்பான உரையாடல்களாக அற்புதமாய் இருக்கிறது.
8. மதுரை என்றாலே இரவு. அதை அற்புதமாய் பாடலில் கொண்டு வந்திருக்கும் நேர்த்தி.
9. ராதாரவின் வெகுநேர்த்தியான பின்குரல்.
10. மீனாள் கதாப்பாத்திரம்.
நன்றி வெற்றிமாறன்.
ஆடுகளம் : துரோகத்தின் வினைத்தொகை
Posted by
நர்சிம்
Thursday, January 20, 2011
Labels: சினிமா விமர்சனம்
32 comments:
நல்ல விமர்சனம் நன்றி நர்சிம்
நல்ல பதிவு! வினைத்தொகை என்று வந்திருக்க வேண்டும்.
ஏதோ முழுப்படத்தையும் பார்த்த மாதிரி இருக்கு. உண்மையான வாழ்க்கை மதுரை வீதிகளில் தான் இருக்கிறது. பகிர்தழுக்கு நன்றி.
ஏதோ முழுப்படத்தையும் பார்த்த மாதிரி இருக்கு. உண்மையான வாழ்க்கை மதுரை வீதிகளில் தான் இருக்கிறது. பகிர்தழுக்கு நன்றி.
உங்க விமர்சனம் வாசிச்சதும் இந்தப் படத்தைப் ப்ரியா காம்ப்ளெக்ஸ்லேயோ, அபிராமிலேயோ பார்க்கணும்னு தோணுது. மதுரைல பார்க்கற எஃபெக்ட்டே தனி தான்.
//ஒருவரின் அன்பில்,அவர் நம்மீது கொண்டிருக்கும் அக்கறையில் திக்கித்திணறி நாம் மூர்ச்சையாகிப் போகும்பொழுது முதுகில் விழும் குத்து...ஆடுகளம்.//
ரெண்டு வரில மொத்தமும் சொல்லிட்டிங்க நர்சிம். அருமையான விமர்சனம்.
அருமையான விமர்சனம்...இம்ம்ம் பார்க்க வேண்டும்.
அருமையான விமர்சனம் நர்சிம். அந்த "பைன்" மேட்டர் எழுத மறந்துடீங்களே...
டைவாவைக் கரெக்ட்பண்ணும் காதலனாக.
டைவா என்ன ஒரு வார்த்தை, 15 வருசம் கழித்து இந்த வார்த்தையை உங்கள் எழுத்துகளின் மூலம் முணுமுணுக்கிறேன்.
மதுரக்காரண்டா..
விக்னேஷ்வரி said...
உங்க விமர்சனம் வாசிச்சதும் இந்தப் படத்தைப் ப்ரியா காம்ப்ளெக்ஸ்லேயோ, அபிராமிலேயோ பார்க்கணும்னு தோணுது. மதுரைல பார்க்கற எஃபெக்ட்டே தனி தான்.
விக்கி, அது மட்டுமா, இங்கே சென்னையில் பாப்கார்னும், பப்ஸ் சாப்பிடும் கொடுமையில்.
மதுர தியேட்டரில் முட்டை போண்டா சூடா போடுவாய்ங்க..நானெல்லாம் இடைவேளயில் 4 முட்ட போண்டா சாப்பிட்டவன்.
சென்னை பாஷையில் சொல்லணும்மனா.. AWESOME.
நல்ல அவதானிப்பு.
//இறுதியில் வழியனுப்பி வைக்கும் வரை இருக்கும் மதுரை நட்பை அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கும் இந்தப் பாத்திரமும் //
அந்த அளவு நுணுக்கம்... வாய்ப்பே இல்லண்ணே ....
// ‘என்கிட்டயே உன்னத் தப்பாச் சொல்றாரு’ என காதலியின் நம்பிக்கை//
//10. மீனாள் கதாப்பாத்திரம். //
படிக்க ஆரம்பிச்சதுல இருந்து இதுகள பத்தி கண்டிப்பா சொல்லி இருப்பிங்கன்னு நினச்சேன்...
அருமைண்ணே... நாம நினைக்குறத / புரிஞ்சுக்கிட்டத இம்புட்டு அழகாவா எழுத முடியும்?!!!! புல் அறிக்குதுண்ணே...
வெற்றி,விக்ரம்,வேல்ராஜ், & crew கடுமையான ஆய்வு & உழைப்ப இந்த படத்துல பண்ணி இருக்காங்க...
என்னைய கேட்டா, உன்[ஏதோ உரிமையில "ங்க" மருவி "ன்" ஆயிருச்சு,கோவிச்சுக்காதேண்ணே] அளவுக்கு வெற்றிமாறன் படத்துல சொல்லாத மாதிரி எனக்கு தோணுதுண்ணே...
உணர்ச்சி மேலிட வாழ்த்துக்கள் வெற்றிமாறன், விக்ரம், ஜெயபாலன், மீனாள், கிஷோர் & நர்சிம்.
லேசான திருப்தியோடு கடவுளைப் பார்க்கும்பொழுது அவரின் குரூரம் தெரிகிறது. //
இது அநேகம் பேர் மிஸ் பண்ணி இருக்கும் உணர்வு, அவர் கவிஞராமே ? இந்த கவிஞருக்கு வெள்ளி திரை போகும் எண்ணம் உண்டா?
அருமையான விமர்சனம் நர்சிம்
// சினிமாவில் வில்லன், நாயகன், குணச்சித்திரம் என அவரவர் பாத்திரம் உணர்ந்து எப்பொழுதுமே நல்லவனாகவும் எப்பொழுதுமே கெட்டவனாகவும் சித்தரிக்கப்பட்டுவந்ததில் இருந்து முற்றும் மாற்றாக, அன்றாடத்தில் எப்படி அவ்வந்த சூழலுக்கு ஏற்ப வாழ்கிறோம் என்பதை மிக நுட்பமாகக் காட்சிப்படுத்தி இருப்பதே இப்படத்தின் ஆகச் சிறப்பு. //
நானும் உணர்ந்த விஷயம்
Chellam.. I LUV YOU.. Naan neenaitha kaatchigal ungal bloggil varigalaai... Polavum orae mannin mainthargalinaala?
உங்க விமர்சனம் வாசிச்சதும் இந்தப் படத்தைப் ப்ரியா காம்ப்ளெக்ஸ்லேயோ, அபிராமிலேயோ பார்க்கணும்னு தோணுது. மதுரைல பார்க்கற எஃபெக்ட்டே தனி தான்
//Adtha vaaram Mdu'ku Ticket Pottachu yoi.. :)
ஒரு இருபது நிமிஷம் கழிச்சுதான் அரங்குக்குள் நுழைந்தேன். இனி ஒரு தடவை பார்க்க வேண்டும்.
நுணுக்கமாக் கவனிச்சுப் பார்த்திருக்கீங்க. ( அது சரி, உங்க ஊருக் கதை இல்லியா?) எழுதிப் பாராட்டி இருக்கிற விதமும் நல்லா வந்திருக்கு.
(காட்சிகளெ நம்ம மூஞ்சிமேல அப்புற மாதிரி ஒரு லென்ஸ் பயன்படுத்தி இருக்காங்க - அது கூடப் பாராட்டப்பட வேண்டும்).
தல ரொம்ப அருமையா சொல்லியிருக்கீங்க..
மிகவும் டீடேயிலான படம் .. தமிழின் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று ... பேட்டைக்காரரும், அயூப்பும், கருப்பும் மனதிற்குள் வந்துவிட்டனர்...
தங்களின் கூர்ந்த அவதானிப்பால் பதிவு, விமர்சனத்தை தாண்டியது.
குட் ரிவ்யூ.!
நர்சிம்,
இது உங்க(நம்ம..)களம்...
சொல்லனுமா?
விமர்சன ஆடுகளத்தில் சமராடி வாகை சூடியிருக்கிங்க.
படித்தவரையில் உங்களுக்குத்தான் வெற்றி(மாறன்)மாலை..!
aadukalam Madurai Kazam Nandri Narsim
நான் இந்த சுட்டியை எனது face book accountல் இணைத்து இருந்தேன்.இன்று எங்கள் அலுவலுகத்திற்கு (சன் டி.வி.) வந்த வெற்றி மாறனிடம் அதனை print out எடுத்து அளித்துள்ளார் நண்பர் ஒருவர்... வரிக்கு வரி அதனை ரசித்தவெற்றிமாறன்.. மிக சரியான புரிதலை உள்ளடக்கிய விமர்சனம் ..மிக்க நன்றி என்று கூறி தங்களிடம் பேசவும் விரும்பினார்.
அருமையான விமர்சனம்.
அனைவருக்கும் மிக்க நன்றி.
// Rafeek said...
நான் இந்த சுட்டியை எனது face book accountல் இணைத்து இருந்தேன்.இன்று எங்கள் அலுவலுகத்திற்கு (சன் டி.வி.) வந்த வெற்றி மாறனிடம் அதனை print out எடுத்து அளித்துள்ளார் நண்பர் ஒருவர்... வரிக்கு வரி அதனை ரசித்தவெற்றிமாறன்.. மிக சரியான புரிதலை உள்ளடக்கிய விமர்சனம் ..மிக்க நன்றி என்று கூறி தங்களிடம் பேசவும் விரும்பினார்.//
நன்றி ரஃபீக். மகிழ்வாய் உணர்கிறேன்.
ஆறுமுகம்..உண்மையான வாழ்கை மதுரை வீதிகளில் தான் இருக்கிறது. அப்படியென்றால் மற்ற இடங்களில் பொய்யான வாழ்கை வாழ்கிறார்களா??!!!#@
ஆறுமுகம்..உண்மையான வாழ்கை மதுரை வீதிகளில் தான் இருக்கிறது. அப்படியென்றால் மற்ற இடங்களில் பொய்யான வாழ்கை வாழ்கிறார்களா??!!!
ஆறுமுகம்..உண்மையான வாழ்கை மதுரை வீதிகளில் தான் இருக்கிறது. அப்படியென்றால் மற்ற இடங்களில் பொய்யான வாழ்கை வாழ்கிறார்களா??!!!
this review is hype.
konjum overthaan sollureenga..
radharavi voice is not yet all fit for the villain..
Still good review
this review is hype.
konjum overthaan sollureenga..
radharavi voice is not yet all fit for the villain..
Still good review
inspector வருவதே interval வரைதான். அவர் நல்லவரா இல்லை கெட்டவர என்பதை கடைசி வரை நம்முடைய ஊகத்துக்கே விட்டது வெற்றிமாறனின் இன்னொரு முயற்சி. அயுபை கொன்றது inspector தான்னு எங்கேயும் வராது. துரை அப்படி நினைப்பதாகத்தான் வரும்.
Post a Comment